தமிழகத்துக்கு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்த போதிய நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று மக்களவையில் தேனி தொகுதி அதிமுக உறுப்பினர் பி.ரவீந்திநாத் குமார் வலியுறுத்தினார்.
மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் அவர் பேசியதாவது:
உலகில் ஆறாவது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா வளர்ந்திருப்பது குறித்து குடியரசுத் தலைவர் தனது உரையில் குறிப்பிட்டிருந்தார். நாட்டின் உள்நாட்டு மொத்த உற்பத்தி 2014-இல் 2.6 சதவீதமாக இருந்தது. 2017-இல் இது 3.3 சதவீதத்தை எட்டியது.
மத்திய அரசால் அளிக்கப்பட்ட வாய்ப்புகளால்தான் இது சாத்தியமானது. உள்நாட்டு மொத்த உற்பத்திக்கு தமிழகமும் சிறப்பான பங்களிப்பை அளித்து வருகிறது.
ஆட்டோமொபைல், உதிரிபாகங்கள், பொறியியல், மருந்துகள், ஜவுளி உள்ளிட்ட உற்பத்தித் துறையில் நாட்டின் நான்காவது மிகப்பெரிய மாநிலமாக தமிழகம் திகழ்கிறது.
தொழிற்சாலைகள், தொழில் பணிகள் எண்ணிக்கையில் மாநிலங்களில் தமிழகம் முதலாவதாகத் திகழ்கிறது. தமிழக அரசு நிகழாண்டு ஜனவரி மாதத்தில் நடத்திய இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாடு, பொருளாதார நிபுணர்கள், தொழில் துறையினரால் பாராட்டப்பட்டது. இதனால், தமிழகத்திற்கு பல்வேறு திட்டங்களுக்காக தேவைப்படும் நிதியை மத்திய அரசு ஒதுக்க வேண்டும் என வலியுறுத்த விரும்புகிறேன். நாட்டில் வேலையில்லா சூழலைக் கையாளுவதற்கு திறன் பயிற்சி மேம்பாடு மிகவும் அவசியம்.
தமிழகத்தில் பருவமழை பொய்த்துள்ளது, வறட்சி நிலவுவகிறது. தமிழகம் மட்டுமின்றி பரவலாக நாடு முழுவதும் இந்தப் பிரச்னை உள்ளது. தமிழகத்தில் மழைநீர் சேகரிப்பு திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது. ஆகவே, நாடு முழுவதும் மழைநீர் சேகரிப்பை கட்டாயமாக்கும் வகையில் ஒரு மசோதாவை கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.