கோவையில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்த சதி: கைதான 3 பேருக்கு 5 நாள் காவல்

கோவையில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டியதாக கைதான 3 பேருக்கு 5 நாள் போலீஸ் காவல் வாங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
கோவையில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்த சதி: கைதான 3 பேருக்கு 5 நாள் காவல்

கோவையில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டியதாக கைதான 3 பேருக்கு 5 நாள் போலீஸ் காவல் வாங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இலங்கையில் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்திய கும்பலுடன் தொடர்பு உள்ளது குறித்து விசாரிக்க, கேரள மாநிலம், கொச்சியில் இருந்து கோவை வந்த தேசியப் புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் 7 இடங்களில் சோதனை நடத்தி 6 பேரை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். இதைத் தொடர்ந்து, கோவை மாநகர போலீஸார் மற்றும் வருவாய்த் துறையினர் இணைந்து கோவை வின்சென்ட் சாலை, கரும்புக்கடை , அன்பு நகர் உள்ளிட்ட பகுதிகளில் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டனர்.  

வின்சென்ட் சாலையில் உள்ள முகமது உசேன், கரும்புக்கடை பகுதியைச் சேர்ந்த ஷேக் சபியுல்லா , அன்பு நகரைச் சேர்ந்த ஷாஜஹான் ஆகியோரது வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில், செல்லிடப்பேசிகள், பென் டிரைவ்கள், கணினி ஹார்டு டிஸ்குகள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து, 3 பேரையும் அழைத்துச் சென்ற போலீஸார், போலீஸ் பயிற்சி மைதானத்தில் வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். 

அதில், 3 பேரும்  சர்வதேச அளவில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமான இஸ்லாமிக் ஸ்டேட் ஆப் இராக் மற்றும் சிரியா பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளர்கள் என்பதும், கோவையில் பயங்கரவாதச் செயல்களை நடத்த சதித் திட்டம் தீட்டியதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, அவர்கள் மீது சட்ட விரோத நடவடிக்கை தடுப்புச் சட்டத்தின் (உபா) கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸார் அண்மையில் அவர்களைக் கைது செய்தனர். 

அதன் பிறகு, ரேஸ்கோர்ஸில் உள்ள மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி சக்திவேல் வீட்டில் அவர்களை ஆஜர்படுத்தினர். 3 பேரையும், வரும் 28-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து 3 பேரையும் பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் சென்ற போலீஸார், அவர்களை கோவை மத்தியச் சிறையில் அடைத்தனர். 

இந்நிலையில் கைதான உசேன், ஷேக், ஷாஜகான் ஆகியோரை 8 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிக்க வேண்டும் என கோவை மாவட்ட நீதிமன்றத்தில் போலீஸ் தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதையடுத்து மூன்று பேருக்கு 5 நாள் போலீஸ் காவல் வழங்கி கோவை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com