கும்பகோணத்தில் உள்ள சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் சீனிவாச ராமானுஜன் மையத்தில் நிகழ் கல்வியாண்டுக்கான பொறியியல் சேர்க்கைக்கான கலந்தாய்வு புதன்கிழமை நடைபெற்றது.
இளநிலை பொறியியல் பட்டப்படிப்புகளான மின்னணுவியல், தகவல் தொடர்பியல், மின்னியல், மின்னணுவியல், கணினி அறிவியல் ஆகிய பிரிவுகளுக்குத் தர வரிசை அடிப்படையில் கலந்தாய்வு நடைபெற்றது.
இதில், தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம், கர்நாடகம், ஆந்திரம், தெலங்கானா, மகாராஷ்டிரம், ஜார்கண்ட், புதுதில்லி உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இந்தக் கலந்தாய்வில் முதலிடத்தை தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் பதல் ரிஹான் பாஷா, இரண்டாமிடத்தை தெலங்கானா டெப்ரூகா நாக், மூன்றாமிடத்தை ஆந்திர மாநிலம் தாரா ஹிமா பிந்து பெற்றனர்.
அகில இந்திய அளவிலும், தமிழ்நாடு அளவிலும், தஞ்சாவூர், திருச்சி மாவட்டங்களுக்கான அளவிலும் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, கலந்தாய்வு நடைபெற்றது.
இக்கலந்தாய்வை சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழக முதன்மையர் (திட்டம் மற்றும் மேம்பாடு) எஸ். சுவாமிநாதன் தொடங்கி வைத்து, மாணவர்களுக்குப் பொறியியல் படிப்புக்கான அனுமதி கடிதத்தை வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பல்கலைக்கழகத் தலைவர் ஆர். சேதுராமன் வழிகாட்டுதலின்படி, பல்கலைக்கழக அலுவலர்கள் செய்தனர்.