சென்னை: காங்கிரஸ் கட்சியில் இருந்து தன்னை தற்காலிகமாக நீக்கியது ஏன் என்று தெரியவில்லை என தென்சென்னை மாவட்டத் தலைவராக இருந்த கராத்தே தியாகராஜன் கூறியுள்ளார்.
கட்சியில் இருந்து நீக்கப்பட்டது குறித்து அடையாறில் உள்ள வீட்டில் தியாகராஜனை சந்தித்த செய்தியாளர் இது குறித்து கேள்வி எழுப்பினார்.
அப்போது, கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டதன் காரணம் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றும், கட்சியின் மூத்த நிர்வாகிகள் என்னுடன் பேசி வருகிறார்கள். விவரங்களை கேட்டறிந்த பிறகு விளக்கம் அளிக்கிறேன் எனவும் கூறினார்.
திமுகவுடன் நெருக்கமாக இருந்ததால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டீர்களா என்று கேட்டதற்கு, அது பற்றி கருத்துக் கூற மறுத்துவிட்டார் கராத்தே தியாகராஜன்.
காங்கிரஸ் கட்சியின் தென் சென்னை மாவட்ட தலைவராக பதவிவகித்து வந்தார் கராத்தே தியாகராஜன். இந்நிலையில் இவரை கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கி அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி நடவடிக்கை எடுத்துள்ளது.
கட்சி விரோத நடவடிக்கை மற்றும் ஒழுங்கீனமான செயலில் ஈடுபட்டதால் அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட வேண்டும் என கராத்தே தியாகராஜன் அண்மையில் கருத்து தெரிவித்தார். அவரின் கருத்து கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுதிய நிலையில், அவர் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.