கீழடியில் 5-ஆம் கட்ட அகழாய்வு: செங்கல் கட்டடம் கண்டுபிடிப்பு

சிவகங்கை மாவட்டம் கீழடியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 5-ஆம் கட்ட அகழாய்வின் போது, செங்கல் கட்டடம் கண்டறியப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம், கீழடியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அகழாய்வுப் பணியின் போது கண்டுபிடிக்கப்பட்ட செங்கல் கட்டடம்.
சிவகங்கை மாவட்டம், கீழடியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அகழாய்வுப் பணியின் போது கண்டுபிடிக்கப்பட்ட செங்கல் கட்டடம்.


சிவகங்கை மாவட்டம் கீழடியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 5-ஆம் கட்ட அகழாய்வின் போது, செங்கல் கட்டடம் கண்டறியப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடி பள்ளிச் சந்தை திடலில் கடந்த 2015 மார்ச் முதல் மத்திய தொல் பொருள் ஆய்வு மையத்தின் மூலம் மூன்று கட்டமாக அகழாய்வு நடைபெற்றது. இதில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மக்கள் வாழ்ந்த செங்கல் கட்டுமான வீடுகள், மண்பாண்டங்கள் உள்பட ஏராளமான பழங்கால பொருள்கள் கிடைத்தன. மேலும் தமிழ்ப் பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட ஓடுகளும் கிடைத்தன. இதையடுத்து, நான்காம் கட்ட அகழாய்வுப் பணியினை தமிழக தொல்லியல் துறை கடந்த 2018 -ஆம் ஆண்டு தொடங்கியது. இந்த ஆய்வில் 5,820 தொல்பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன. நான்கு கட்ட அகழாய்வில் கிடைத்த 13,638 தொல் பொருள்களும் தொல்லியல் துறை அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
 இந்நிலையில்,  ஜூன் 13-ஆம் தேதி தமிழ் ஆட்சி மொழி மற்றும் கலை பண்பாட்டுத் துறை அமைச்சர் க.பாண்டியராஜன்,5-ஆம் கட்ட அகழாய்வுப் பணியை தொடங்கி வைத்தார். சுமார் 7 ஏக்கர் பரப்பளவில் ரூ.47 லட்சம் மதிப்பீட்டில் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. இதில் தரைக்கு கீழே உள்ள கட்டமைப்பை அறியும் பொருட்டு, மும்பையில் உள்ள இந்திய புவி காந்த விசையியல் நிறுவனத்துடன் இணைந்து ஆய்வு செய்யப்பட்டு பணிகள் தொடங்கின.  இதில் நான்கு குழிகளை ஆய்வு செய்த பின், 5-ஆவது குழியினை தோண்டும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அப்போது, தரையிலிருந்து சுமார் ஒரு அடி ஆழத்தில் செங்கல் கட்டடம் கண்டறியப்பட்டது.
இதுகுறித்து தொல்லியல் துறை அலுவலர்கள் கூறியது: 5-ஆம் கட்ட அகழாய்வுப் பணியில் கடந்த சில நாள்களாக 4 குழிகள் தோண்டப்பட்டு ஆய்வு பணிகள் நடைபெற்றன. அதில், ஏற்கெனவே அகழாய்வு செய்த இடத்தில் கிடைத்ததுபோல், மண்பாண்ட ஓடுகள் உள்ளிட்ட ஏராளமான தொல் பொருள்கள் கிடைத்துள்ளன. 
செவ்வாய்க்கிழமை 5-ஆவது குழியைத் தோண்டும் போது, சுமார் ஒரு அடி ஆழத்தில் சிதைவு பெறாத நிலையில் செங்கற்களால் ஆன கட்டடம் கண்டறியப்பட்டது. அதுகுறித்த ஆய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த இடத்தில் இன்னும் ஏராளமான தொல் பொருள்கள் கிடைக்கும் நம்பிக்கை உள்ளது என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com