பொறியியல் சீர்திருத்தக் குழுவை அமைத்து பொறியியல் துறைகளின் செயல்திறனை மேம்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியப் பொறியாளர் கூட்டமைப்பு தீர்மானம் நிறைவேற்றியது.
இந்தியப் பொறியாளர் கூட்டமைப்பின் தென் மண்டலக் கூட்டம் சென்னையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஆந்திரம், கேரளம், கர்நாடகம், தமிழகம், தெலங்கானா ஆகிய மாநிலங்களின் பொறியாளர் சங்கங்களின் நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். கூட்டத்துக்கு இந்தியப் பொறியாளர் கூட்டமைப்பின் தென் மண்டலத் தலைவர் என்.வெங்கடேஸ்வருலு தலைமை வகித்தார். கூட்டமைப்பின் தலைவர் சி. தேவநாத், துணைத் தலைவர் எஸ். ஆனந்த் ஆகியோர் கூட்டமைப்பின் அவசியம் குறித்துப் பேசினர்.
இதையடுத்து கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம்: ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளை பொறியாளர்கள் தற்போது பெற்று வரும் ஊதியத்தின் அடிப்படையில் அமல்படுத்த வேண்டும் என தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறோம், பொறியியல் சீர்திருத்தக் குழு அமைத்து பொறியியல் துறைகளின் செயல்திறனை மேம்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொறியியல் துறைகளில் ஓய்வு பெறும் எந்தப் பொறியாளர்களுக்கும் பணி நீட்டிப்பு, மறுபணி நியமனம் அளிக்கக் கூடாது என தமிழக அரசு மற்றும் அனைத்து மாநில அரசுகளைக் கேட்டுக் கொள்கிறோம்.
பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை போன்ற துறைகளில் உள்கட்டமைப்புப் பணிகளை செயலாக்கம் செய்வதற்கு அரசு பங்களிப்புடன் கூடிய குழுமங்களை ஏற்படுத்துவதைத் தவிர்த்து அரசுத் துறைகள் மூலமாகவே அரசுப் பணிகளை செயலாக்கம் செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் கூட்டமைப்பின் தென் மண்டலப் பொதுச் செயலாளர் கே.அன்பு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.