சென்னை: பொறியியல் படிப்புக்கு ஒரு செமஸ்டருக்கு ரூ.15,000 வரை கல்விக் கட்டணத்தை உயர்த்திக் கொள்ள அண்ணா பல்கலைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
தரமணியில் சென்ட்ரல் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் இன்று பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வை அமைச்சர் அன்பழகன் தொடக்கி வைத்தார்.
பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அன்பழகன், தமிழகத்தில் தேவைக்கு அதிகமாக பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.
மாணவர் சேர்க்கை இல்லாததால் 15 பொறியியல் கல்லூரிகள் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கையே வேண்டாம் என்று கூறிவிட்டன. ஏற்கனவே சேர்ந்த மாணவர்கள் படிப்பை முடிக்கும் வரை கல்லூரியை நடத்த வேண்டிய நிலையில் உள்ளார்கள்.
மாணவர் சேர்க்கை இல்லை என்றால் பொறியியல் கல்லூரிகளை மூடுவதைத் தவிர வேறு என்ன வழி உள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.