மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு எதிரான தேசத் துரோக வழக்கில் ஜூலை 5-ஆம் தேதி தீர்ப்பு அளிக்கப்படும் என்று சிறப்பு நீதிமன்றம் இன்று (புதன்கிழமை) தெரிவித்தது.
சென்னையில் கடந்த 2009-ஆம் ஆண்டு நடந்த நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய வைகோ மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக பேசியதாக, அவர் மீது தேசத் துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. சென்னை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கானது, பின்னர் எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜெ.சாந்தி முன் கடந்த 6-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையின் போது வைகோ ஆஜரானார். அப்போது அரசு தரப்பு சாட்சியான ஆயிரம் விளக்கு காவல் நிலைய ஆய்வாளர் மோகனிடம், வைகோ தரப்பு வழக்குரைஞர் தேவதாஸ் குறுக்கு விசாரணை செய்தார். இதனையடுத்து அனைத்து அரசு தரப்பு சாட்சியங்களிடம் விசாரணை முடிந்ததையடுத்து, வழக்கு வரும் 17-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
17-ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின்போதும், வைகோ நீதிமன்றத்தில் ஆஜரானார். இதையடுத்து, இந்த வழக்கை 19-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த நிலையில், இந்த வழக்கானது இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதன் முடிவில், இந்த வழக்கு மீதான தீர்ப்பு வரும் ஜூலை 5-ஆம் தேதி வழங்கப்படும் என்று நீதிபதி தெரிவித்தார்.