மாநிலம் முழுவதும் புதிதாகத் தொடங் கப்பட்டுள்ள மருத்துவமனைகளை ஆய்வுக்குள்படுத்தி உரிமம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதன் ஒரு பகுதியாக, சென்னையில் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள 50 மருத்துவமனைகள், கிளீனிக்குகளுக்கு அடுத்த சில நாள்களில் உரிமம் வழங்கப்பட உள்ளதாகவும் அவர்கள் கூறினர்.
தமிழகத்தில் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவமனைகளும், கிளீனிக்குகளும், சிறிய அளவிலான மருத்துவ மையங்களும் செயல்பட்டு வருகின்றன. பொதுவாக மருத்துவமனைகள், கிளீனிக்குகள் ஆகியவற்றுக்கு பதிவு உரிமம் பெறுவது அவசியம்.
அவ்வாறு உரிமம் பெற்றாலும் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை அதனைப் புதுப்பிக்க வேண்டும். அதற்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் கடந்த மார்ச் 31-ஆம் தேதி வரை வழங்கப்பட்டது. ஆனால், 80 சதவீத மருத்துவமனைகளும், கிளீனிக்குகளும் அந்த காலக்கெடுவுக்குள் உரிமம் கோரி விண்ணப்பிக்காததால் மே 31 வரை அந்த அவகாசம் நீட்டிக்கப்பட்டது.
அதன்படி, இதுவரை 24 ஆயிரம் மருத்துவமனைகள், கிளீனிக்குகள் புதிதாக பதிவு உரிமம் கோரி விண்ணப்பித்திருப்பதாகத் தெரிகிறது. இந்நிலையில், அந்த மருத்துவமனைகளின் உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து மாவட்டந்தோறும் சுகாதார சேவைகள் இணை இயக்குநர் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். அதன் அடிப்படையில், தற்போது ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவமனைகளில் ஆய்வு செய்யப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. அதில் பெரும்பாலானவை போதிய உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் இந்திய மருத்துவ கவுன்சிலின் விதிகளின்படி இருப்பதால், அவற்றுக்கு உரிமம் வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக மருத்துவ சேவைகள் இயக்குநரக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து அவர்கள் மேலும் கூறுகையில், மாவட்ட வாரியாக மேற்கொள்ளப்பட்டு வரும் ஆய்வு நடவடிக்கைகள் குறித்த தகவல்களைத் திரட்டி வருகிறோம்; விண்ணப்பித்த அனைத்து மருத்துவமனைகளுக்கும், கிளீனிக்குகளுக்கும் விரைவில் ஆய்வு நடத்தி உரிமம் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்றனர்.