சந்தையில் விற்பனை செய்யப்படும் 33 மருந்துகளை தரமற்றவை என்று மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
அவற்றில் பெரும்பாலானவை உத்தரகண்ட், மகாராஷ்டிரத்தில் தயாரிக்கப்பட்டவை. தென்னிந்தியாவைப் பொருத்தவரை கர்நாடகம், புதுச்சேரியில் தயாரிக்கப்பட்ட இரு மருந்துகள் தரமற்றவை என வகைப்படுத்தப்பட்டுள்ளன.
நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான மருந்து -மாத்திரைகளும், மத்திய மற்றும் மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள் மூலம் ஆய்வு செய்யப்படுகின்றன. அதேபோன்று போலி மருந்துகளும் கண்டறியப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதன்படி, கடந்த மாதத்தில் மட்டும் 821 மருந்துகள் ஆய்வுக்குள்படுத்தப்பட்டன. அவற்றில் 788 மருந்துகளின் தரம் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேவேளையில், வயிற்றுப் போக்கு, தொண்டையில் கிருமித் தொற்று, வயிற்றுப் புண் உள்ளிட்டவற்றுக்கு பயன்படுத்தப்படும் 33 மருந்துகள் போலியாகவும், தரமற்றவையாகவும் இருந்தது கண்டறியப்பட்டது.
இதையடுத்து அதன் விவரங்களை மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது.
அவற்றில் பெரும்பாலானவை மகாராஷ்டிரம், உத்தரகண்ட், ஹிமாசலப் பிரதேசம், குஜராத், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் தயாரிக்கப்பட்டவை என்று தெரியவந்துள்ளது. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருந்து கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பாக இதய ரத்தக் குழாய்களில் பொருத்தப்படும் ஸ்டென்ட், ஃபேஸ் மேக்கர், செயற்கை மூட்டு உபகரணம் உள்ளிட்ட மருத்துவ சாதனங்களின் விற்பனை மற்றும் தரத்தை ஒழுங்குமுறைபடுத்துவதற்காக 754 சிறப்பு அதிகாரிகளை பணியமர்த்த மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் முடிவு செய்தது நினைவுகூரத்தக்கது.