தமிழக மருத்துவமனைகளில் செயல்படுத்தப்பட்டு வரும் தாய் அவசர சிகிச்சை முறை குறித்து சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கருடன் ஆஸ்திரேலிய தூதர் புதன்கிழமை கலந்தாலோசித்தார்.
அவசர சிகிச்சைக்காக வரும் நோயாளிகளின் உடல்நிலையைப் பொருத்து அவர்களை வகைப்படுத்தி, அதற்குரிய சிகிச்சைகளை துரிதமாகவும், துல்லியமாகவும் அளிக்கப்படும் நடைமுறை தாய் எனப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் உள்ள சிகிச்சை முறைகளைப் பின்பற்றி அத்திட்டம் தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்காக அந்நாட்டுடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தமும் செய்துள்ளது.
முதல்கட்டமாக, ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை உள்பட 75 மருத்துவமனைகளில் கடந்த ஆண்டு சோதனை முறையில் விபத்து மற்றும் அவசரகால சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டது. சிகப்பு, மஞ்சள், பச்சை என மூன்று பிரிவுகள் உருவாக்கப்பட்டு நோயாளிகளுக்குத் தேவையான உயிர் காக்கும் சிகிச்சைகள் அங்கு அளிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், அதுகுறித்து ஆலோசனை நடத்த ஆஸ்திரேலிய பிரதிநிதிகள் சென்னை வந்தனர். இந்தியாவுக்கான ஆஸ்திரேலிய தூதர் ஹரிந்தர் சித்து, துணைத் தூதர் சூசன், தூதரக அதிகாரி மைக்கேல் கோஸ்டா உள்ளிட்டோர் தலைமைச் செயலகத்தில் சுகாதாரத் துறை அமைச்சரைச் சந்தித்தனர். அப்போது தாய் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து அவர்கள் விரிவாக கலந்தாலோசித்தனர்.
இந்தக் கூட்டத்தில் சுகாதாரத் துறைச் செயலர் பீலா ராஜேஷ், தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் டாக்டர் தாரேஸ் அகமது, சுகாதாரத் துறை இணைச் செயலாளர் கிரண் குராலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.