கிரேசி மோகன் மறைவுக்கு முதல்வர் பழனிசாமி, திமுக தலைவர் ஸ்டாலின், காங்கிரஸ் தமிழக தலைவர் அழகிரி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பிரபல நகைச்சுவை நாடக நடிகரும் புகழ்பெற்ற வசனகர்த்தாவுமான கிரேஸி மோகன் மாரடைப்பு காரணமாக இன்று (திங்கள்கிழமை) காலமானார். அவரது மறைவுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி: நாடகத்துறை மற்றும் திரைத்துறையில் தனக்கென தனி முத்திரை பதித்தவருமான கிரேசி மோகன் மறைவு தமிழ் நாடகத்துறைக்கும், திரைத்துறைக்கும் ஒரு பேரிழப்பாகும். கிரேசி மோகனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திரையுலக மற்றும் நாடகத் துறை நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்: நடிகர், திரையுலக கதை-வசன கர்த்தா, பலமேடை நாடகங்களை இயக்கி நடித்தவருமான கிரேசி மோகன் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்! தனது நகைச்சுவைக்கு என்று ஒரு தனிரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்ட அவரின் மறைவு திரையுலகிற்கும், மேடைநாடக உலகத்திற்கும் மிகப்பெரிய இழப்பு.
கே.எஸ்.அழகிரி: தமிழ்த் திரையுலகிற்கு அளப்பரிய பங்காற்றிய கிரேசி மோகன் மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திரையுலக நண்பர்களுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்சி சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.