தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவர்களை பணியிட மாற்றம் செய்ய இடைக்காலத் தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் கோவையைச் சேர்ந்த அரசு மருத்துவர்கள் சரவணப்ரியா, நிம்மி சிவக்குமார் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்டவர்கள் தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் உள்ள மருத்துவர்களில் பலர் அரசு மருத்துவமனைகளில் பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்களாகப் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் 860 மருத்துவர்களை கட்டாயப் பணியிட மாற்றம் செய்ய மருத்துவக் கல்வி இயக்குநரகம் கடந்த மே மாதம் 24-ஆம் தேதி சுற்றறிக்கை அனுப்பியது. இந்த பணியிட மாற்றங்களுக்காக நடந்து வரும் கலந்தாய்வு ஜூன் 7-ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. எனவே இந்த கலந்தாய்வுக்கு தடை விதிக்க வேண்டும் எனக் கோரியிருந்தனர்.
இந்த வழக்கு நீதிபதி வி.பார்த்திபன் முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில், இந்த கலந்தாய்வு, விதிகளைப் பின்பற்றி முறையாக நடைபெறவில்லை. மூத்த மருத்துவர்கள் கட்டாய பணியிட மாற்றம் செய்யப்படுவதாகக் கூறி வாதிடப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, மனுதாரர்களான மருத்துவர்களை தொந்தரவு செய்யக்கூடாது எனவும், அவர்களை பணயிடமாற்றம் செய்ய இடைக்காலத் தடை விதித்து விசாரணையை ஒத்திவைத்தார்.