பிகார் மாநிலத்தைச் சேர்ந்த சிறுவனின் காலில் இருந்த 10 கிலோ எடையுள்ள புற்றுநோய்க் கட்டியை அகற்றி சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை புரிந்துள்ளனர்.
இது குறித்து ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவனை முதல்வர் டாக்டர் பொன்னம்பல நமசிவாயம் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது,
பிகார் மாநிலம், தர்பங்கா பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுவன் அப்துல் காதருக்கு இடது கால் தொடை பகுதியில் ஒரு கட்டி இருந்தது. தொடக்கத்தில் சிறிதாக இருந்த அக்கட்டி நாளடைவில் தொடர்ந்து வளர்ந்து சிறுவனால் நடக்கக் கூட இயலாத நிலை ஏற்பட்டது. இதனையடுத்து சிறுவனை அங்குள்ள சில தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் அவரின் இடது காலை அகற்ற வேண்டும் என்றும், அதற்கான செலவு ரூ. 2 லட்சம் வரை ஆகும் எனவும் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, ஸ்டான்லி மருத்துவமனையில் கடந்த ஜனவரி மாதம் அச்சிறுவன் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மிகப்பெரிய அளவில் வளர்ந்துள்ள புற்றுநோய்க் கட்டியால் எலும்பு, தசை, ரத்த நாளங்கள் உள்ளிட்டவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதைக் கண்டறிந்தனர்.
அதன் தொடர்ச்சியாக சிக்கலான அறுவைச் சிகிச்சை மூலமாக அந்த புற்று நோய்க்கட்டி அகற்றப்பட்டது. கட்டியை அகற்றிய இடத்தில் ஏற்பட்ட தோல் இழப்பை ஈடுகட்ட வலது காலில் இருந்து மேல் தோல் எடுக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. சுமார் 10 கிலோ எடையுடைய கட்டியை ஸ்டான்லி மருத்துவமனையில் அகற்றியது இதுவே முதல் முறை என்றார் பொன்னம்பல நமசிவாயம்.