நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மேலும் 5 காசுகள் உயர்ந்து, ரூ.3.55-ஆக திங்கள்கிழமை நிர்ணயம் செய்யப்பட்டது.
தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின், நாமக்கல் மண்டல முட்டை விலை நிர்ணயக் குழுக் கூட்டம் அதன் தலைவர் மருத்துவர் பி.செல்வராஜ் தலைமையில் நாமக்கல்லில் திங்கள்கிழமை நடைபெற்றது. பிற மண்டலங்களில் முட்டையின் விலை உயர்த்தப்பட்டு வருவதால், இங்கும் விலையை உயர்த்துவது தொடர்பாக பண்ணையாளர்களிடையே ஆலோசிக்கப்பட்டது. இதையடுத்து, முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலையை மேலும் 5 காசுகள் உயர்த்தி, ஒரு முட்டை விலை ரூ.3.55-ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. சென்னை மண்டலத்திலும் 5 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.3.65-ஆக நிர்ணயம் செய்யப்பட்டது.
பிற மண்டலங்களில் முட்டை விலை விவரம் (காசுகளில்): ஹைதராபாத்-311, விஜயவாடா-317, பார்வாலா-290, மும்பை-360, மைசூரு-347, கொல்கத்தா-350, ஹோஸ்பெட்-305, பெங்களூரு-340, தில்லி-305.இதேபோல் பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், முட்டைக்கோழி கிலோ ரூ.56-ஆகவும், கறிக்கோழி ரூ.77-ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டது.