தமிழ்நாடு

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு சிறந்த மேலாண்மைக்கான விருது

30th Jul 2019 04:39 AM

ADVERTISEMENT

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு சிறந்த மேலாண்மைக்கான மத்திய அரசு விருதை பிரதமர் மோடி திங்கள்கிழமை வழங்கினார். 
தென்னிந்தியாவின் முக்கிய  புலிகள் காப்பகமாக சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் திகழ்ந்து வருகிறது. இது புலிகள் காப்பகமாக 2013 ஆம் ஆண்டு மார்ச் 1 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.
சுமார் 1,455 சதுர கி.மீ. பரப்பளவு கொண்ட இந்த புலிகள் காப்பகத்தில் 116 சிறுத்தைகள், 70 புலிகள், ஆயிரக்கணக்கான யானைகள், காட்டெருமைகள், அரிய வகை வெளிமான்கள், கழுதைப்புலி, வெண்முதுகு கழுகுகள் போன்ற வன விலங்குகள் மற்றும் பறவையினங்கள் உள்ளன.  புலி, சிறுத்தை, யானைகளின் புகலிடமாக உள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 2018 ஆம் ஆண்டு  மத்திய அரசின் புலிகள் பாதுகாப்பு ஆணைய அதிகாரிகள் அடங்கிய குழுவினர் ஆய்வு செய்தனர்.
புலிகள் பாதுகாப்பு, புலிகள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல், உள்ளூர் மக்களின் பங்களிப்பு போன்ற 10 தகுதிகளின் அடிப்படையில் மத்திய அரசின் சிறந்த மேலாண்மைக்கான விருதுக்கு சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் தேர்ந்தெடுக்கப்பட்டது. இதையடுத்து, தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில் சிறந்த புலிகள் காப்பகத்துக்கான விருதை பிரதமர் மோடியிடம் இருந்து புலிகள் காப்பகத்தின் மண்டல காப்பாளர் நாகநாதன் பெற்றுக் கொண்டார்.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு மத்திய அரசு விருது வழங்கப்பட்டதால் வனத் துறையினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். புலிகள் காப்பகத்தில் சிறப்பாகப் பணியாற்றிய வனத் துறை பணியாளர்கள், உலக இயற்கை நிதியத்தின் களப் பணியாளர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் ஆகியோருக்கு துணைக் கள இயக்குநர் அருண்லால் பாராட்டு தெரிவித்துள்ளார்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT