மேற்கு சென்னைக்கு அருகே சில மேகக் கூட்டங்கள் அலைந்து கொண்டிருக்கின்றன. அதனால், சென்னையின் ஒரு சில பகுதிகளில் மழைக்கான வாய்ப்பு இருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார்.
இது குறித்து தனது ஃபேஸ்புக்கில் கூறியிருப்பதாவது, மேற்கு சென்னைக்கு அருகே மேகக் கூட்டங்கள் காணப்படுகின்றன. இது நிச்சயம் சென்னையின் சில பகுதிகளில் மழைக்கான வாய்ப்பை ஏற்படுத்தும். ஆனால் இது சென்னை முழுவதும் மழைக்கான வாய்ப்பை ஏற்படுத்தாது, ஆங்காங்கே மட்டுமே இருக்கும்.
இன்று மாலை மழை பெய்வதற்கான அனைத்து சாத்தியக் கூறுகளும் காலை முதலே தென்பட்டது.
நல்ல வெப்பமான நாள், கடற்காற்று தரைப்பகுதிக்கு வந்தது ஆகியவை காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை ஆகிய மாவட்டங்களில் மழைக்கு ஒரு நல்ல மாற்றமாக அமைந்தது.
ஒட்டுமொத்தமாக தமிழகம் முழுவதுமே இதுபோன்ற ஒரு சூழ்நிலை அடுத்த ஒரு வாரத்துக்கு நீடிக்கும். தற்போது வட இந்திய மாநிலங்களில் தீவிரமாக இருக்கிறது தென் மேற்குப் பருவ மழை. இது தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதி மற்றும் உள் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்களில் தென் மேற்குப் பருவ மழை சூடுபிடிக்கலாம்.
காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை மாவட்டங்களில் ஒவ்வொரு வெப்பமான நாளின் மாலை வேளையில் நிச்சயம் மழைக்கான வாய்ப்பு உறுதியாக இருக்கும். நிச்சயம் பெரிய மழையாக இல்லாவிட்டாலும் ஒரு தூறலாவது பெய்யும் என்று நம்பலாம் என்று கூறியுள்ளார்.