வடபழனி முருகன் கோயிலில் ஆடிக் கிருத்திகையொட்டி இன்று அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
ஆடிக் கிருத்திiகையை முன்னிட்டு அனைத்து முருகன் ஸ்தலங்களிலும் இன்று அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். வடபழனியில் உள்ள முருகன் கோயிலில் இன்று அதிகாலை 4.00 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டுச் சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டன.
பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்தும் தங்கள் நேர்த்தி கடனைச் செலுத்தி வருகின்றனர். காவடி எடுக்கும் பக்தர்களுக்குக் கட்டணம் ஏதும் வசூலிக்கப்படவில்லை. அதிகாலை 4 மணி முதல் 12 வரை சிறப்பு அலங்கார தரிசனமும், மதியம் 1 முதல் மாலை 4 வரை தங்க கவச அலங்கார தரிசனமும், மாலை 4 முதல் இரவு 11 மணி வரை சந்தனக்காப்பு புஷ்ப அலங்கார தரிசனமும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பல்வேறு பகுதிகளிலிருந்து திரளான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், கோயில் நிர்வாகம் சார்ப்பில் பக்தர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.