சென்னை: ஜூன் 28ம் தேதி தொடங்கி ஜூலை 31ம் தேதி வரை நடைபெற வேண்டிய தமிழக பேரவைக் கூட்டம் வேலூர் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு முன்கூட்டியே தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
மொத்தம் 23 நாட்கள் நடத்தப்பட வேண்டிய கூட்டத் தொடர் 14வது நாளான இன்று தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக அவைத் தலைவர் தனபால் கூறினார்.
மேலும், அவை நடவடிக்கைகள் குறித்து அவைத் தலைவர் தனபால் கூறியிருப்பதாவது, நடந்து முடிந்த கூட்டத் தொடரில் திமுக எம்எல்ஏ மஸ்தான் அதிக கேள்வி எழுப்பினார். மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் 129 உறுப்பினர்கள் பேசினர். பல்வேறு கேள்விகளுக்கு முதல்வர் பழனிசாமி நினைவாற்றலுடன் பதில் அளித்தார்.
எம்எல்ஏக்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அதிகமாக பதில் அளித்ததில் முதல் இடத்தில் வேலுமணியும் 2ம் இடத்தில் தங்கமணியும், 3ம் இடத்தில் செங்கோட்டையும் உள்ளனர்.
அனைத்து நாள் கூட்டங்களிலும் முதல்வர் பழனிசாமியும், எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலினும் பங்கேற்றனர் என்று தெரிவித்துக் கொண்டார்.
கடந்த ஜூன் 28ம் தேதி தொடங்கிய சட்டப்பேரவைக் கூட்டம் வேலூர் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு முன்கூட்டியே முடித்துக் கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.