சென்னை: தமிழகத்தில் இந்தியை திணிக்கவில்லை, மாறாக தமிழை வளர்க்கும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது என்று மத்திய அமைச்சர் கூறியுள்ளார்.
சென்னை விமான நிலையத்துக்கு வந்த மத்திய நிதித் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது தபால் துறை தேர்வில் பிராந்திய மொழிகளை நீக்கி மத்திய அரசு எடுத்த நடவடிக்கை இந்தி திணிப்புதானே என்று கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு அவர் கூறியதாவது, தமிழகத்தில் இந்தியைத் திணிக்க மத்திய அரசு முயலவில்லை. மாறாக, தமிழை வளர்க்கவே நடவடிக்கை எடுத்து வருகிறது. நிர்வாக அளவில் ஏதேனும் ஒரு நடவடிக்கை எடுக்கப்பட்டால் உடனடியாக அதனை இந்தி திணிப்பு என்று சொல்லிவிடக் கூடாது. தமிழின் மேம்பாட்டுக்காகவே மத்திய அரசும் நடவடிக்கை எடுக்கிறது என்று கூறினார்.
மேலும், மோடி அரசு சூட்கேஸ் தூக்கும் அரசு அல்ல, சூட்கேஸ் கொடுத்து வாங்கும் முறை இந்த அரசிடம் இல்லை என்றும் நிர்மலா சீதாராமன் கூறினார். பட்ஜெட் தாக்கலின் போது சூட்கேஸுக்கு பதில் அரசு சின்னம் பொறிக்கப்பட்ட பையில் பட்ஜெட் நகலைக் கொண்டு வந்தது குறித்து அவர் இவ்வாறு விளக்கம் அளித்தார்.