மத்திய அரசு கொண்டுவர உள்ள நெக்ஸ்ட் தேர்வுக்கு தமிழக சட்டப்பேரவையில் அதிமுக மற்றும் திமுக ஆகிய கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.
எம்டி மற்றும் எம்எஸ் ஆகிய முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு நடைமுறையை கைவிட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால் அதற்கு பதிலாக தேசிய நிறைவுத் தேர்வு என்ற பெயரில் புதிதாக தேர்வு நடந்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் எம்பிபிஎஸ் நெக்ஸ்ட் தேர்வு தொடர்பாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் இன்று கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.
அப்போது பேசிய அவர், இறுதி ஆண்டு பயிலும் மருத்துவ மாணவர்கள் தேசிய நெக்ஸ்ட் தேர்வு எழுத வேண்டும் என்ற மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது, இதை தமிழகம் ஏற்கக்கூடாது என்று வலியுறுத்தினார். இதற்கு பதிலளித்து பேசிய சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், நெக்ஸ்ட் தேர்வை எதிர்க்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தமிழக அரசு உறுதியாக இருக்கிறது.
2016ஆம் ஆண்டு மசோதா கொண்டு வந்த போதே, அதிமுக கடுமையாக எதிர்த்தது. எந்த நிலையிலும் மாநில அரசின் உரிமையை விட்டுக் கொடுக்க மாட்டோம் என்று கூறினார்.