ரயில்வே தனியார் மயமாக்கப்பட்டால் ரயில் கட்டணம் மட்டுமல்லாது, காய்கறி, பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலை உயரும் என எஸ்ஆர்எம்யு-வின் பொதுச் செயலர் என்.கண்ணையா கூறினார்.
மதுரை ரயில் நிலையத்தின் மேற்கு நுழைவுவாயிலில் செய்தியாளர்களிடம் அவர் புதன்கிழமை கூறியது:
ரயில்வே துறையைத் தனியார் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தாரைவார்க்கும் முயற்சியில் மத்திய அரசு இறங்கியுள்ளது. குறிப்பாக 100 நாள் திட்டம் என்ற பெயரில் ரயில் இன்ஜின்கள், ரயில் பெட்டிகள் மற்றும் ரயில் சக்கரங்கள், டீசல் இன்ஜின் உபகரணங்கள் ஆகியவற்றைத் தயாரிக்கும் ரேபரோலி எம்சிஎப், சென்னை ஐசிஎப் உள்ளிட்ட 7 இடங்களில் உள்ள ரயில்வே உற்பத்தி தொழிற்சாலைகளை தனியாருக்குத் தாரைவார்க்க உள்ளனர். மேலும் முதற்கட்டமாக ஒவ்வொரு ரயில்வே மண்டலங்களிலும் லாபகரமாக ஓடிக் கொண்டிருக்கும் 2 பயணிகள் விரைவு ரயில்களையும் ஐஆர்சிடிசி மூலமாக தனியார் நிறுவனங்களுக்கு விற்கும் மத்திய அரசின் முடிவை எதிர்த்து எஸ்ஆர்எம்யு போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளது.
ரயில்வே அமைச்சகம் டில்லி-லக்னோ தேஜஸ் விரைவு ரயிலை தனியாருக்கு ரூ.60 கோடிக்கு விற்றுள்ளது. இந்த வண்டியின் மூலமாகக் கிடைக்கும் பயணச் சீட்டு வருமானம், சரக்கு வருமானம், விளம்பர வருமானம் ஆகியவற்றைத் தனியார் நிறுவனம் எடுத்துக் கொள்ளும். தற்போது 53 சதவீத மானியத்தில் ரயில் பயணச் சீட்டு விற்கப்படுகிறது.
ரூ.100 மதிப்பிலான பயணச் சீட்டிற்கு ரூ.47 மட்டுமே பயணிகளிடம் வசூலிக்கப்படுகிறது. மீதம் 53 ரூபாயை ரயில்வே அமைச்சகம் ஏற்றுக்கொண்டு, சரக்கு போக்குவரத்து மூலம் கிடைக்கும் லாபத்தின் மூலமாக சரிசெய்து கொள்கிறது. சென்னை - மதுரை தேஜஸ் விரைவு ரயிலில் செல்ல ரூ.895, மூத்தகுடிமக்கள் ஆண்களுக்கு ரூ.575, பெண்களுக்கு ரூ.475 செலுத்தினால் போதும். ஆனால் தேஜஸ் ரயில்கள் தனியார் வசம் சென்றால், மானியம் ரத்து செய்யப்பட்டு, முழுத் தொகை வசூலிக்கப்படும். விமான கட்டணத்திற்கு நிகராக ரயில் கட்டணம் உயர்த்தப்படும். ரயில்வே தனியார் மயமானால் ரயில் கட்டணம் உயர்வது மட்டுமின்றி காற்கறி, பால், உணவுப் பொருள்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களின் விலையும் உயரும் நிலை ஏற்படும். இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். பல்லாயிரக்கணக்கான ரயில்வே ஊழியர்கள் தங்களின் வேலையை இழக்க நேரிடும்.
இளைஞர்களின் வேலை வாய்ப்பு பறிபோகும். எனவே ரயில்வே தனியார்மயமாவதை எதிர்த்து ரயில்வே ஊழியர்களுடன் சேர்ந்து பொதுமக்களும் போராட வேண்டும் என்றார்.