மதுரை மாநகராட்சியில் 100 வார்டுகளில் உள்ள தெரு விளக்குகள் எண்ணிக்கை மற்றும் அதற்காக செலுத்தப்படும் மின்கட்டணம் ரூ.104.55 கோடி என்று மாநகராட்சி அதிகாரிகள் தவறான தொகையை அளித்தது தொடர்பாக விசாரிக்கப்பட்டு வருகிறது.
மதுரை மாநகராட்சியில் 4 மண்டலங்களுக்குள்பட்ட 100 வார்டுகளில் அமைக்கப்பட்டுள்ள தெரு விளக்குகள் எத்தனை, மின் இணைப்புகள், அவற்றுக்காக செலுத்தப்படும் மின் கட்டணம் ஆகியவை குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் விவரங்கள் கேட்கப்பட்டது. இதில் மாநகராட்சி நிர்வாகம் அளித்த பதிலில், தெரு விளக்குகள் மண்டலம் 1இல் 15, 827 மின்விளக்குகள், மண்டலம் 2-இல் 15, 975 மின்விளக்குகள், மண்டலம் 3-இல் 9, 275 மின்விளக்குகள், மண்டலம் 4-இல் 12, 821 மின்விளக்குகள் என 100 வார்டுகளிலும் மொத்தம் 53, 898 தெரு விளக்குகள் உள்ளன. மதுரை மாநகராட்சியில் மண்டலம் 1-இல் 942 மின் இணைப்புகள் , மண்டலம் 2-இல் 828 மின் இணைப்புகள், மண்டலம் 3-இல் 747 மின் இணைப்புகள், மண்டலம் 4-இல் 808 மின் இணைப்புகள் என மொத்தம் 3,325 மின் இணைப்புகள் உள்ளன. தெருவிளக்குகளுக்கு ஒரு மாதத்துக்கு பயன்படுத்தப்படும் மின்சாரம் யூனிட் அளவுகளில், மண்டலம் 1-இல் 9, 46, 600 யூனிட்டுகள், மண்டலம் 2-இல் 12,50,800 யூனிட்டுகள் மண்டலம் 3-இல் 7,55,200 யூனிட்கள், மண்டலம் 4-இல் 11,69,100 யூனிட்கள் என மொத்தம் 41,21,700 யூனிட்கள் உபயோகப்படுத்தப்படுகிறது.
மேலும் தெரு விளக்குகள் பயன்பாட்டுக்காக மின் வாரியத்திற்கு செலுத்திய மின்சார கட்டணம் மாத வாரியாக 2018 ஏப்ரலில் ரூ. 84,43,730, மே மாதம் ரூ.94, 64, 118, ஜூன் ரூ.85, 61, 229, ஜூலை 93, 76, 505, ஆகஸ்ட் ரூ.84, 94, 217, செப்டம்பர் ரூ.95, 37, 165, அக்டோபர் ரூ.84,94, 217, நவம்பர் ரூ.94,20,979, டிசம்பர் ரூ.86, 78, 959, 2019 ஜனவரி ரூ. 96, 22, 096, பிப்ரவரி ரூ.90, 89, 207, மார்ச் ரூ. 94, 42, 867, ஏப்ரல் ரூ.9, 27, 53, 3400, மே ரூ.93,26,511 என மொத்தம் ரூ. 104 கோடியே 55 லட்சத்து 45 ஆயிரத்து 937 என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்திருந்தது. மாநகராட்சியில் 100 வார்டுகளில் உள்ள 58,398 தெரு விளக்குகளுக்கு 41,12,700 யூனிட்டுகளுக்கு ஒரு யூனிட் ரூ.12 என்று கணக்கிட்டாலும் கூட ரூ.5,77,03,800 தான் வருகிறது. இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, தெரு விளக்குகளுக்காக செலுத்தப்பட்ட தொகை தவறாக கணக்கிடப்பட்டு பல மடங்கு கூடுதலாக ரூ.104.55 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் தவறான தொகையை தெரிவித்தது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றனர்.