தனது துறைகளின் மீதான மானியக் கோரிக்கைகளை தாக்கல் செய்து உரையாற்ற பேரவைக்கு வந்த முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மேசையைத் தட்டி வரவேற்பு அளித்தனர்.
கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் அமைச்சராகவும், 2016-ஆம் ஆண்டு முதல் பொதுப்பணித் துறை அமைச்சர் பொறுப்பையும் சேர்த்து முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கவனித்து வருகிறார்.
இந்த நிலையில், நிகழ் நிதியாண்டில் பொதுப்பணி, நெடுஞ்சாலைகள் துறை மானியக் கோரிக்கைகளை பேரவையில் தாக்கல் செய்ய திங்கள்கிழமை காலை 9.57 மணிக்கு பேரவைக்கு வந்தார் முதல்வர் பழனிசாமி.
அப்போது, அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் அவருக்கு வரவேற்பு தெரிவிக்கும் வகையில் மேசையைத் தட்டி ஒலி எழுப்பினர். இதன் பின்பு, காலை 10 மணிக்கு கேள்வி நேரத்தில் பங்கெடுத்த அவர், அதன்பின்பு சுமார் மூன்றரை மணி நேரம் நடந்த விவாதங்களில் பங்கெடுத்து அவற்றுக்குப் பதிலளித்து புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.