வேலூர் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளரை தேர்தல் ஆணையம் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா வலியுறுத்தினார்.
வேலூர் மக்களவைத் தொகுதியில், பணப் பட்டுவாடா மற்றும் ஏராளமான பணத்தை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்ததன் காரணமாகத்தான் அங்கு தேர்தல் நிறுத்தப்பட்டது. இப்போது அந்தத் தொகுதிக்கு மீண்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திமுக சார்பில் அதே வேட்பாளர் போட்டியிடுகிறார். இது ஆரோக்கியமான விஷயமல்ல.
அந்தத் தொகுதியில் பணப் பட்டுவாடா மீண்டும் நடைபெறுவதற்கே இது வழிவகுக்கும். எனவே, தவறு செய்த அந்த வேட்பாளரைத் தகுதி நீக்கம் செய்தால்தான், இந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும். உள்ளாட்சித் தேர்தலைப் பொருத்தவரை, ஏற்கெனவே கூறியதுபோல மக்களவைத் தேர்தலில் இருந்த கூட்டணியில் தேமுதிக தொடரும்.
தபால்துறை தேர்வின் வினாத் தாளில் தமிழ் தடை செய்யப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. அந்தந்த மாநில மொழிகளில் தபால் துறை தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என்றார் பிரேமலதா.