தமிழக அரசு ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக கொள்கை முடிவினை நிறைவேற்றிட வேண்டும்: மு.க.ஸ்டாலின்

தமிழக அரசு ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக கொள்கை முடிவினை நிறைவேற்றிட வேண்டும் என்று திமுக தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
தமிழக அரசு ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக கொள்கை முடிவினை நிறைவேற்றிட வேண்டும்: மு.க.ஸ்டாலின்

தமிழக அரசு ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக கொள்கை முடிவினை நிறைவேற்றிட வேண்டும் என்று திமுக தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிரான கொள்கை முடிவு குறித்து சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுகையில்,
நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தினைப் பற்றி ஒரு வினா எழுப்பப்பட்டிருக்கின்றது. அதில் குறிப்பாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி உள்ளிட்ட தமிழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தக் கேள்வியை நாடாளுமன்றத்தில் எழுப்பியிருக்கின்றார்கள். அதற்கு, பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஒரு பதிலை சொல்லியிருக்கின்றார். தமிழகத்தில் மீத்தேன் திட்டம் எதுவும் செயல்படுத்தப்படவில்லை, 7 ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில் 2 ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்களோடு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இந்த திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றது. தமிழ்நாட்டிற்கு மேலும் 23 ஹைட்ரோ கார்பன் கிணறுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பெட்ரோலியம் மற்றும் மைனிங் லைசென்ஸ் தமிழக அரசிடமிருந்து எதிர்பார்க்கப்படுகிறது என்று கூறியிருக்கின்றார். 

ஏற்கனவே இதே அவையில் நான் ஹைட்ரோ கார்பன் திட்டத்தைப் பற்றி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தேன். அப்பொழுது பதிலளித்துப் பேசிய தொழிற்துறை அமைச்சர் தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு, தமிழக அரசு உறுதியாக அதனை அனுமதிக்காது விவசாயிகள் அச்சப்படத் தேவையில்லை என்று இந்த பேரவையில் பேசி அது பதிவாகியிருக்கின்றது. அதுமட்டுமல்ல எங்களுடைய கழக உறுப்பினர் டி.ஆர்.பி‌.ராஜா அவர்களும் ஒரு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து இதனைப் பற்றி அவரிடம் கருத்து கேட்ட நேரத்தில். அப்பொழுது பதிலளித்துப் பேசிய சட்டத்துறை அமைச்சர் தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு அனுமதியே கிடையாது எந்த நிறுவனத்திற்கும் தமிழகத்தில் அனுமதி வழங்கப்படவில்லை. ஓ.என்.ஜி.சி அனுமதி கோரியும் தமிழக அரசு ஒப்புதல் தரவில்லை. இதுதான் உண்மை என்று உறுதியாக பதில் தந்திருக்கிறார். 

எனவே, நான் கேட்க விரும்புவது ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி வழங்கப்படாது என்பதை ஒரு கொள்கை முடிவெடுத்து இந்த அரசு அறிவிக்க வேண்டும் அறிவிப்பது மட்டுமல்ல அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் அனுப்பி வைத்தால்தான் அங்கு இருக்கக்கூடிய விவசாயிகள் நிம்மதிப் பெருமூச்சு அடைய முடியும். எனவே ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு அனுமதி வழங்கப்படாது என்ற ஒரே கொள்கை முடிவினை இந்த அரசு எடுக்க வேண்டும். அதுவும் இந்தக் கூட்டத்தொடரில் எடுத்திட வேண்டும். காரணம் டெல்டா பகுதியில் இருக்கக்கூடிய விவசாயப் பெருங்குடி மக்கள் ஒரு பதட்டமான சூழ்நிலையில் இருந்து கொண்டிருக்கின்றார்கள். நேற்றைய தினம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு தலைமையில் ஒரு போராட்டம் நடந்திருக்கின்றது, அவரும் கைது செய்யப்பட்டார். இப்படி போராட்டங்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றது. எனவே இதற்கு ஒரு முடிவு காண வேண்டும் என்று சொன்னால், உடனடியாக இந்த கூட்டத் தொடரிலேயே ஒரு கொள்கை முடிவெடுத்து அறிவிக்க வேண்டும் என்று கேட்டு அமர்கின்றேன்.

விவசாயிகளின் நலன்கருதி போராடக்கூடியவர்களை கொச்சைப்படுத்தி பேசுவது என்பது மரபல்ல. நான் கேட்கவிரும்புவது. நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் சம்பத்தப்பட்டிருக்கக்கூடிய மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தந்திருக்கக்கூடிய பதிலின் அடிப்படையில் தான், நான் மீண்டும் - மீண்டும் கேட்கின்றேன். டெல்டா பகுதியில் இருக்கக்கூடிய விவசாயப் பெருங்குடி மக்களுக்கு ஒரு நிம்மதி வரவேண்டும் என்று சொன்னால் உடனடியாக ஒரு கொள்கை முடிவு எடுத்து அதை நீங்கள் அறிவித்து, இந்த அவையில், இந்தக் கூட்டத்தொடரில் நிறைவேற்றினால்தான் அங்கு இருக்கக்கூடிய விவசாயப் பெருங்குடி மக்கள் நிம்மதி அடைவார்கள். எனவே, போராட வேண்டிய அவசியம் ஏற்படாது அந்த எண்ணத்தில் தான் என்னுடைய கருத்தை நான் இங்கு பதிவு செய்கின்றேன். இவ்வாறு அவர் பேசினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com