கர்நாடகத்தில் நிலவும் அரசியல் நெருக்கடிகளுக்கு விகிதாசார பிரதிநிதித்துவ முறையே தீர்வு என்று பாமக நிறுவனர் டாக்டர் ச. ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: கர்நாடகத்தில் ஆளும் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதளம் கூட்டணியைச் சேர்ந்த 13 சட்டப்பேரவை உறுப்பினர்கள் பதவி விலகுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து அங்கு ஏற்பட்ட அரசியல் நெருக்கடி இன்னும் தீரவில்லை. கட்சித் தாவல்கள், வாக்களித்த மக்களுக்கு பிரதிநிதிகள் கிடைக்காதது உள்ளிட்ட அனைத்துப் பிரச்னைகளுக்கும் ஒரே தீர்வு விகிதாசார பிரதிநிதித்துவ முறையை அறிமுகம் செய்வதுதான். ஒவ்வொரு கட்சி சார்பிலும் தேர்தல் ஆணையத்திடம் அளிக்கப்பட்ட பட்டியலில் உள்ளவர்கள் சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களாக நியமிக்கப்படுவார்கள். இந்த முறையில் வாக்களிக்கும் அனைத்து மக்களுக்கும் உரிய பிரதிநிதித்துவமும் கிடைக்கும் என்பதால் இதுதான் இந்தியாவுக்கு உண்மையான ஜனநாயகமாக இருக்கும் என்று கூறியுள்ளார்.