எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு விண்ணப்பித்த தமிழகத்தைச் சாராத 22 மாணவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மருத்துவக் கல்வி இயக்கக தேர்வுக் குழு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் குடியேறியதற்கான பூர்விகச் சான்று முறையாக இல்லாத காரணத்தால் அவர்களை நீக்கியுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு கடந்த மாதம் நடைபெற்றது. அதில், மொத்தமாக 59,756 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டதாக மருத்துவக் கல்வி இயக்குநரகத் தேர்வுக் குழு தெரிவித்தது.
அதைத் தொடர்ந்து அவை பரிசீலனை செய்யப்பட்டு தர வரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது. அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் 11,741 மாணவர்கள், 19,612 மாணவிகள் என மொத்தம் 31,353 பேரின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன. அதேபோன்று, நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான பட்டியலில் 9,366 மாணவர்கள், 16,285 மாணவிகள் என மொத்தம் 25,651 பேருக்கு தரவரிசைகள் வழங்கப்பட்டிருந்தன.
மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு கடந்த வாரத்தில் இருந்து நடைபெற்று வரும் நிலையில், தரவரிசைப் பட்டியலில் 218 வெளிமாநிலத்தவர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளதாக சர்ச்சை எழுந்தது. மேலும், அவர்கள் இரு மாநிலங்களில் விண்ணப்பித்திருப்பதாகவும் கூறப்பட்டது.
அவர்களில் 77 பேரின் பெயர்கள் ஆந்திர மாநில தரவரிசைப் பட்டியலிலும், 130 பேரின் பெயர்கள் கர்நாடக மாநில தரவரிசைப் பட்டியலிலும், 12 பேரின் பெயர்கள் தெலங்கானா தரவரிசைப் பட்டியலிலும் இடம் பெற்றிருப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்தன. இதையடுத்து, போலியாக இருப்பிடச் சான்று பெற்று 2 மாநிலங்களில் விண்ணப்பித்தவர்களைக் கண்டுபிடிக்கும் பணியில் சுகாதாரத் துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டனர். இந்த நிலையில், 22 மாணவர்களின் பூர்விகச் சான்றில் குளறுபடி இருப்பது கண்டறியப்பட்டு அவர்களது பெயர்கள் தமிழக தரவரிசைப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக மருத்துவக் கல்வி இயக்குநர் எட்வின் ஜோ கூறியதாவது:
கலந்தாய்வுக்கு வரும் மாணவ, மாணவிகளின் இருப்பிடச் சான்று, ஜாதி சான்று உள்பட பல்வேறு ஆவணங்கள் சரிபார்க்கப்படுகின்றன. எவரேனும், வேறு மாநிலத்திலும் விண்ணப்பித்திருப்பது தெரியவந்தால் அவருடைய பெயர் தமிழக தரவரிசைப் பட்டியலில் இருந்து உடனடியாக நீக்கப்படும். அரசு ஒதுக்கீட்டுக்கான இடங்களில் வெளிமாநிலத்தவர் எவரும் பயனடையாமல் தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றார் அவர்.