தமிழகத்தின் 8 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு: பாலச்சந்திரன் தகவல்

தமிழகத்தின் வேலூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் 8 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு: பாலச்சந்திரன் தகவல்

சென்னை: தமிழகத்தின் வேலூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பாலச்சந்திரன் கூறியதாவது, வளிமண்டலத்தின் கீழ் அடுக்கில் வட தமிழகம் முதல் தென் தமிழகம் வரை உள் மாவட்டங்கள் வழியாக குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை நிலவுகிறது.

இதன் காரணமாகவும் வெப்பச் சலனம் காரணமாகவும் அடுத்த 3 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.

கன மழையைப் பொருத்தவரை  வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களிலும், மேற்கு தொடர்ச்சி மலையைப் ஒட்டியுள்ள நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களை ஒட்டியிருக்கும் மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யும் என்ற தெரிவித்துள்ளார்.

மேலும், சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் மாலை மற்றும் இரவு நேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தாமரைப்பாக்கத்தில் 10 செ.மீ. மழையும், போரூரில் 8 செ.மீ. மழையும் பெய்துள்ளது.

தென்மேற்குப் பருவ மழையைப் பொறுத்தவரை கடந்த ஜூன் 1ம் தேதி முதல் இன்று வரை பதிவான மழையின் அளவு 6 செ.மீ. ஆகும். இயல்பாக இந்த காலக்கட்டத்தில் பெய்திருக்க வேண்டிய மழையின் அளவு 9 செ.மீ. இது 31 சதவீதம் குறைவு.

தென்மேற்கு பருவ மழை வட மாநிலங்களுக்கு நகர்ந்துவிட்டதால் அங்கு கன மழை பெய்து வருகிறது. இங்கு வெப்பச் சலனத்தால் மழை பெய்து வருகிறது என்று பாலச்சந்திரன் கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com