விதண்டாவாதம் செய்தவர்களுக்கான நிரந்தரமான வாய்ப்பூட்டு: தமிழில் அஞ்சல் துறை தேர்வு முடிவு குறித்து ஸ்டாலின் 

விதண்டாவாதம் செய்தவர்களுக்கான நிரந்தரமான வாய்ப்பூட்டு என்று தமிழில் அஞ்சல் துறை தேர்வு என்ற முடிவு குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். 
விதண்டாவாதம் செய்தவர்களுக்கான நிரந்தரமான வாய்ப்பூட்டு: தமிழில் அஞ்சல் துறை தேர்வு முடிவு குறித்து ஸ்டாலின் 

சென்னை: விதண்டாவாதம் செய்தவர்களுக்கான நிரந்தரமான வாய்ப்பூட்டு என்று தமிழில் அஞ்சல் துறை தேர்வு என்ற முடிவு குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் செவ்வாயன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

அஞ்சல் துறை போட்டித்தேர்வுகள் தமிழ் மொழியில் நடத்தப்படும்” என்று மத்திய சட்டத்துறை அமைச்சர் திரு ரவிசங்கர் பிரசாத் அவர்கள் அறிவித்திருப்பதை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன். தமிழக இளைஞர்களின் வேலை வாய்ப்பினைப் பாதிக்கும் வகையில், அஞ்சல் துறையின் சார்பில் 14.7.2019 அன்று இந்தியிலும் ஆங்கிலத்திலும் மட்டும் நடத்தப்பட்ட போட்டித் தேர்வினை ரத்து செய்திருப்பது மிகுந்த ஆறுதல் அளிக்கிறது.

அஞ்சல் துறையில் வேலை வாய்ப்புகளுக்காக தமிழில் நடைபெற்று வந்த போட்டித் தேர்வினை திடீரென்று “ஆங்கிலத்திலும், இந்தியிலும் மட்டுமே நடத்துவோம்” என்று சுற்றறிக்கை  வெளியானவுடன், முதலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.  சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சரிடமும் கழக நாடாளுமன்ற உறுப்பினர் திரு தயாநிதி மாறன் மூலம் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு- “சுற்றறிக்கையைத்  திரும்பப் பெற வேண்டும்” என்று வலியுறுத்தப்பட்டது. தமிழக சட்டமன்றத்திலும் பிரதான எதிர்கட்சித் தலைவர் என்ற முறையில், இந்தப்  பிரச்சினை குறித்து சிறப்புக் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்து,  மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் முயற்சிகளில் திராவிட முன்னேற்றக் கழகம் தீவிரமாக ஈடுபட்டது.

திராவிட முன்னேற்றக் கழக மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள்,  இரு அவைகளிலும்  இது  குறித்துப்  பிரச்சினையைக் கிளப்பி,  கடுமையாக எதிர்த்ததோடு மட்டுமின்றி, “மீண்டும் அஞ்சல் துறைத்  தேர்வுகளை தமிழிலும், மாநில மொழிகளிலும் நடத்திட வேண்டும்” என்று தீவிரமான அழுத்தம் கொடுத்து வந்தனர். இந்த நிலையில்,  திராவிட முன்னேற்றக் கழகத்தின் உறுதியாக வாதாடும் - போராடும் குணத்திற்கு கிடைத்த இன்னொரு வெற்றியாக  “தேர்வு ரத்து” “தமிழ் மொழியிலும் இனிமேல் தேர்வு” என்ற அறிவிப்பை மத்திய சட்டத்துறை அமைச்சர்  வெளியிட்டுள்ளார். தி.மு.க. வெற்றி பெற்று என்ன சாதிக்கப் போகிறது என்று வீண்வாதம் - விதண்டாவாதம் செய்தவர்களுக்கு இப்போது கிடைத்துள்ள வெற்றி, நிரந்தரமான வாய்ப்பூட்டு போடும் என்று நம்புகிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com