விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தைச் சேர்ந்த மூதாட்டி தொடர் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில், டெங்கு பாதிப்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
திண்டிவனம் காருகுறிச்சி அருணாசலம் தெருவைச் சேர்ந்த ராஜாராமன் மனைவி மீரா (72). அண்மையில் காய்ச்சல் ஏற்பட்டதால், திண்டிவனம் ஜெயபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். காய்ச்சல் குணமடையாததால், புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பதாக சந்தேகத்தின் பேரில், ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மேலும், மீராவை தனி வார்டில் அனுமதித்து சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநர் பாலுசாமியிடம் கேட்டபோது, மூதாட்டி மீரா நீரழிவு, ரத்த அழுத்தத்தால் உடல்நிலை பாதித்து, திண்டிவனம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். காய்ச்சல் தீவிரமானதால், புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு சென்று, சிகிச்சை பெற்று வருகிறார்.
அவருக்கு ரத்தத்தில் ரத்தத் தட்டுகள் எண்ணிக்கை குறைந்ததால், மேம்படுத்துவதற்காக சிகிச்சையளிக்கப்படுகிறது. டெங்கு பாதிப்பு குறித்த சந்தேகத்தால், ரத்த மாதிரி ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் கேட்டுள்ளோம். திண்டிவனத்தில் மீரா வசித்து வரும் குடியிருப்புப் பகுதிகளில் நகராட்சி மற்றும் சுகாதாரக் குழுவினர் சென்று ஆய்வு செய்தனர். இதுவரை டெங்கு காய்ச்சல் பாதிப்பு எதுவும் இல்லை என்றார் அவர்.