ரூ.100 கோடி அபராதம் விதித்த பசுமைத் தீர்ப்பாய உத்தரவுக்குத் தடை கோரிய தமிழக மனு தள்ளுபடி

சென்னையில் ஓடும் நதிகளை பராமரிக்கத் தவறிய தமிழக அரசுக்கு ரூ.100 கோடி அபராதம் விதித்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை கோரிய தமிழக அரசின் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்
ரூ.100 கோடி அபராதம் விதித்த பசுமைத் தீர்ப்பாய உத்தரவுக்குத் தடை கோரிய தமிழக மனு தள்ளுபடி

சென்னையில் ஓடும் நதிகளை பராமரிக்கத் தவறிய தமிழக அரசுக்கு ரூ.100 கோடி அபராதம் விதித்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை கோரிய தமிழக அரசின் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

சென்னையில் ஓடும் கூவம், அடையாறு நதிகளையும், பக்கிங்ஹாம் கால்வாய் உள்ளிட்ட நீர்நிலைகளையும் பராமரிக்க தமிழக அரசு தவறிவிட்டதாகக் கூறி,  தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் முன், ஜவஹர்லால் சண்முகம் என்பவர் வழக்கு தொடுத்திருந்தார். 

வழக்கை விசாரித்த பசுமைத் தீர்ப்பாயம் நதிகளையும், கால்வாயையும் தூர்வாரி பராமரிக்காமல் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு காரணமான பொதுப்பணித் துறைக்கு ரூ.100 கோடி அபராதம் விதித்து, கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவிட்டது. 

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலாளரை ஏப்.23-ஆம் தேதி ஆஜராக உத்தரவிட்டிருந்தது. 

மேலும், சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஆய்வு செய்யவும், மறுசீரமைப்பு நடவடிக்கைகளை கண்காணிக்கவும் மத்திய-மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்கள், இந்திய அறிவியல் கழகம், நீரி அமைப்பு, மெட்ராஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் எகானாமிக்ஸ் ஆகிய நிறுவனங்களிலிருந்து தலா ஒருவர் அடங்கிய குழுவை நியமித்து மூன்று மாத காலத்துக்குள் அறிக்கை தாக்கல் செய்யவும்  தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது. 

இதையடுத்து, அபராதத் தொகை விதிக்கப்பட்டதை எதிர்த்து தமிழக பொதுப்பணித் துறை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது கூவம், அடையாறு, பக்கிங்ஹாம் கால்வாய் உள்ளிட்டவைகளில் மேற்கொண்ட நடவடிக்கைகளை கருத்தில் கொள்ளாமல் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக, அரசுத் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.

மேலும் தீர்ப்பாயம் ஏற்கெனவே ரூ.2 கோடி அபராதம் விதித்து பிறப்பித்த உத்தரவுக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.  அரசுத் தரப்பு வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், பசுமைத் தீர்ப்பாயம் ரூ.100 கோடி அபராதம் விதித்து பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.

மேலும், இதுதொடர்பாக பசுமைத் தீர்ப்பாயம், மனுதாரர் ஜவஹர்லால் சண்முகம் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்திருந்தனர்.

இந்த நிலையில், தமிழக அரசின் மனு மீதான விசாரணை முடிவடைந்த நிலையில், மனுவை தள்ளுபடி செய்வதாக நீதிபதிகள் இன்று தீர்ப்பளித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com