தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்குப் போட்டியிட இயக்குநர்கள் எஸ்.பி.ஜனநாதன், ஆர்.கே.செல்வமணி, அமீர் உள்ளிட்ட 4 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
விக்ரமன் தலைமையிலான குழு, இயக்குநர்கள் சங்க நிர்வாகத்தைக் கவனித்து வந்தது. இந்த நிர்வாகத்தின் பதவிக் காலம் முடிவடைந்ததையடுத்து, புதிய நிர்வாகக் குழு தேர்வு செய்யப்பட வேண்டும்.
இந்த நிலையில் பெரும்பான்மையான உறுப்பினர்களின் ஆதரவுடன் பாரதிராஜா சங்கத்தின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார்.
ஆனால், தலைவர் பதவியிலிருந்து பாரதிராஜா திடீரென்று ராஜிநாமா செய்தார்.
இதையடுத்து, இயக்குநர்கள் சங்கத்துக்கு வரும் 21-ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. தலைவர், துணைத் தலைவர், செயலாளர், பொருளாளர், செயற்குழு உறுப்பினர்கள் ஆகிய பதவிகளுக்காக இந்த தேர்தல் நடைபெறுகிறது. ஓய்வு பெற்ற நீதிபதி செந்தில்நாதன் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
தேர்தல் அதிகாரியிடம் தலைவர் பதவிக்குப் போட்டியிட ஆர்.கே.செல்வமணி, எஸ்.பி.ஜனநாதன், அமீர், வித்யாதரண் ஆகிய 4 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
இதுதவிர, செயலாளர், பொருளாளர், துணைத் தலைவர், செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கும் மனு தாக்கல்
செய்யப்பட்டுள்ளன.