புது தில்லி: புதுச்சேரி துணைநிலை ஆளுநருக்கு சிறப்பு அதிகாரம் எதுவும் இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் அண்மையில் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துவிட்டது.
புதுச்சேரி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே கூடுதல் அதிகாரம் உள்ளது. புதுச்சேரி அரசின் நடவடிக்கைகளில் ஆளுநர் கிரண்பேடி தலையிடக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி மற்றும் மத்திய அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் அண்மையில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இது தொடர்பான மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதி சஞ்சீவ் கன்னா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரிக்கப்பட்டது.
விசாரணையின் போது, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தவரும், காங்கிரஸ் எம்எல்ஏவுமான கே.லட்சுமிநாராயணன் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் கபில் சிபல், மேல்முறையீட்டு மனுக்களுக்கு ஆட்சேபம் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி, சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவால் புதுச்சேரியில் நிர்வாகம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்றார்.
இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் அமர்வு, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்து, கிரண்பேடி மற்றும் மத்திய அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.