அத்திவரதரை தரிசிக்க இன்று பிற்பகல் 2.20 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைந்தார் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த். இவரது வருகையையொட்டி, பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
சென்னை விமான நிலையத்தில் இருந்து சிறப்பு ஹெலிகாப்டர் மூலம் ராம்நாத் கோவிந்த் காஞ்சிபுரம் செல்கிறார். அங்கு மாலை 3 மணியளவில் அத்திரவரதரை தரிசிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அத்திவரதரை தரிசிக்க வெள்ளிக்கிழமை வழக்கம் போல் காலை 5 மணிக்கு கிழக்கு கோபுரம் வழியாக பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து, நண்பகல் 12.30 மணியளவில் கிழக்கு கோபுரம் வழியாக பொதுதரிசனம், முக்கியஸ்தர்கள் தரிசனம் நிறுத்தப்பட்டது.
இதையடுத்து, பாதுகாப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு, பிற்பகல் 2.30 மணியளவில் பச்சையப்பன் ஆடவர் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிகாப்டர் இறங்கு தளத்தில் குடியரசுத் தலைவர் வருகை புரியவுள்ளார். தொடர்ந்து, 3 மணியிலிருந்து 4 மணிக்குள் அவர் அத்திவரதரை தரிசனம் செய்த பிறகு புறப்பட்டுச் செல்கிறார்.
குடியரசுத்தலைவர் புறப்பட்ட பிறகு வழக்கம் போல் மாலை 4.30 மணியிலிருந்து பொதுமக்கள் அத்திவரதரை தரிசனம் செய்யலாம்.
மூன்று அடுக்கு பாதுகாப்புக்காக சுழற்சி முறையில் பணியில் ஈடுபட்டுள்ள சுமார் 2,000 போலீஸாரும் குடியரசுத் தலைவர் தரிசனம் செய்யும் நேரத்தில் பணியில் அமர்த்தப்படவுள்ளனர் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.