நிகழாண்டில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (ஐ.ஓ.பி.) வங்கி ஆர்.பி.ஐ.யின் உடனடி திருத்த நடவடிக்கை (பி.சி.ஏ) வரையறையில் இருந்து வெளியேறி, லாபத்தில் செயல்படும் என்று ஐ.ஓ.பி. மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி கர்ணம் சேகர் நம்பிக்கை தெரிவித்தார்.
சென்னையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி கர்ணம் சேகர் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது: கடந்த 5 நிதியாண்டுகளாக வங்கி நஷ்டத்தில் இயங்கி வந்தது. கடந்த 4 ஆண்டுகளாக ரிசர்வ் வங்கியின் (ஆர்.பி.ஐ) உடனடி திருத்த நடவடிக்கை (பி.சி.ஏ) வரையறையில் இந்திய ஓவர்சீஸ் வங்கி இருக்கிறது. இந்த ஆண்டு, பி.சி.ஏ வரையறையில் இருந்து வெளியே வந்து விடுவோம். அதற்கான நடவடிக்கை முடிந்துவிட்டது. இரண்டாவது காலாண்டு நிதியாண்டில் வங்கி லாபம் ஈட்டும். நிகர வட்டி, நிகர வட்டி வருவாய், நடப்புக் கணக்கு மற்றும் சேமிப்புக் கணக்கு ஆகியவற்றை மேம்படுத்தத் திட்டமிட்டிருக்கிறோம். வங்கியின் மொத்த வாராக்கடன் கடந்த ஆண்டு 25 சதவீதமாக இருந்தது. நிகழாண்டில் மொத்த வாராக்கடன் 21 சதவீதமாகக் குறைந்துள்ளது. பெருநிறுவனங்களுக்கு அளித்த வாராக்கடன் அதிகமாக இருக்கிறது. அவற்றின் சொத்துகள் மீது நடவடிக்கை எடுத்து வாராக்கடன் குறைக்க நடவடிக்கை எடுக்க உள்ளோம்.
இதற்காக ஒருமுறை தீர்வு என்னும் சிறப்பு முகாம்களை ஏற்பாடு செய்துள்ளோம். இந்த ஆண்டும் சிறப்பு முகாம்கள் நடத்துவதன் மூலம், வாராக்கடன் திரும்ப பெறப்படும். நஷ்டத்தில் இயங்கிய 300 வங்கிக் கிளைகளின் எண்ணிக்கை தற்போது 45-ஆக குறைந்துள்ளது. வங்கிக் கிளைகளில் இயங்கும் ஏ.டி.எம்.களை மூடும் எண்ணம் இல்லை. அதே நேரத்தில், ஏ.டி.எம்.களை இடம் மாற்றி அமைக்க யோசனை உள்ளது என்றார் அவர்.