தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க அனைத்து ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளையும் தமிழக அரசு தொடர்ந்து எடுக்கும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கூறியுள்ளார்.
இது தொடர்பாக புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிவிப்பு:
ராமேசுவரம் பகுதியைச் சார்ந்த 9 மீனவர்கள் 2 படகுகளில் அவர்களது பாரம்பரிய மீன்பிடி பகுதியான பாக் வளைகுடா பகுதிக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.
ஜனவரி 13-ஆம் தேதியன்று அதிகாலை மீன் பிடி பணியில் அவர்கள் ஈடுபட்டிருந்தபோது, இலங்கை கடற்படையினர் விரட்டியதில், இரு படகுகளும் கவிழ்ந்தன.
இந்த விபத்துக்குப் பின்னர் 8 மீனவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். ஆனால், விபத்தில் கருப்பையா என்பவரின் மகன் முனியசாமி துரதி ருஷ்டவசமாக கடலில் மூழ்கி உயிரிழந்தார். இந்தச் செய்தியை அறிந்து மிகவும் துயரம் அடைந்தேன்.
தமிழக மீனவர்கள் தங்களது வாழ்வாதாரத்துக்காக அவர்களது பாரம்பரிய மீன்பிடி பகுதியான பாக் வளைகுடா பகுதிக்கு மீன் பிடிக்கச் செல்லும்போது, இலங்கை கடற்படையினர், அவர்களது படகுகளை விரட்டி அடிப்பதையும், வலைகளைச் சேதப்படுத்துவதையும், படகுகளை கைப்பற்றுவதையும் நான் அவ்வப்போது சுட்டிக் காட்டி, துரித நடவடிக்கை எடுக்க மத்திய அரசை வலியுறுத்தி வந்துள்ளேன்.
தற்போது நிகழ்ந்துள்ள இந்த சம்பவத்துக்கும் என்னுடைய கடும் கண்டனத்தைத் தெரிவிக்கிறேன்.
தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க அனைத்து ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளையும் அதிமுக அரசு தொடர்ந்து எடுக்கும்.
ரூ.5 லட்சம் நிதி: படகு கவிழ்ந்து அகால மரணமடைந்த முனியசாமியின் குடும்பத்துக்கு என் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவிக்கிறேன்.
மேலும், இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்த முனியசாமியின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன் என்று அவர் அந்த அறிவிப்பில் கூறியுள்ளார்.