பொய் பிரசாரம் செய்பவர்களுக்கு மக்களவைத் தேர்தலில் மக்கள் நீதி வழங்குவர் என்றார் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி.தங்கமணி.
நாமக்கல் மாவட்டம், மோகனூரில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை அவர் பேசியது:
வல்லூர் அனல் மின் நிலையத்தில் திங்கள்கிழமை முதல் மின் உற்பத்தி தொடங்கி உள்ளது. இன்னும் 2 அல்லது 3 நாள்களில் முழு உற்பத்தியும் தொடங்கிவிடும். ஏற்கெனவே கூறியதுபோல தமிழகத்தில் எப்போதும் மின்வெட்டு கிடையாது. சில நாள்களாக 1,500 மெகாவாட் மின் உற்பத்தி தடைபட்டிருந்தது. புதன்கிழமை முதல் முழுமையாக 1,500 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும்.
தமிழக முதல்வர் பொங்கல் பரிசாக ரூ.1,000 கொடுத்தது, அனைத்து தரப்பு மக்களிடமும் சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது.
காழ்ப்புணர்ச்சி காரணமாக முதல்வர் மீது பொய் குற்றச்சாட்டு கூறி, எதிர்க்கட்சித் தலைவர் ஆளுநரை சந்தித்து மனு கொடுத்திருக்கிறார். அது சம்பந்தமாக அதிமுக சார்பில், முதல்வர் மீது பொய் புகார் கூறப்பட்டுள்ளது என்ற புகாரை துணை ஒருங்கிணைப்பாளர் முனுசாமி ஆளுநரிடம் கொடுத்திருக்கிறார்.
இது முழுக்க முழுக்க அரசியலுக்காக நடத்தப்படும் நாடகமே ஒழிய, அதில் கடுகளவும் உண்மை இல்லை. அடுத்தக்கட்ட நடவடிக்கையாக சட்டத்தின் வாயிலாக நீதி கிடைப்பதற்கு காலதாமதமானாலும் கூட, விரைவில் வரும் மக்களவைத் தேர்தலில் பொய் பிரசாரம் செய்பவர்களுக்கு மக்கள் நீதி வழங்குவர் என்றார்.