பொங்கலை முன்னிட்டு ஜனவரி 11 முதல் 14-ஆம் தேதி வரை நான்கு நாள்களில் 13,871 பேருந்துகள் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்பட்டுள்ளன. இவற்றில் 7 லட்சத்து 17 ஆயிரத்து 392 பேர் பயணித்துள்ளனர்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் செல்பவர்களின் வசதிக்காக சென்னையிலிருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், அதுபோல தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து முக்கிய ஊர்களுக்கும் கூடுதல் எண்ணிக்கையில் பேருந்துகளை ஜனவரி 11 முதல் 14-ஆம் தேதி வரை தமிழக அரசு இயக்கியது.
மீண்டும் பண்டிகை முடிந்து ஊர் திரும்ப வசதியாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னைக்கும் பிற முக்கிய ஊர்களுக்கும் ஜனவரி 17 முதல் 20-ஆம் தேதி வரை கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
7.17 லட்சம் பேர் பயணம்: இந்த நிலையில், பொங்கல் பண்டிகைக்காக சென்னையிலிருந்து மட்டும் ஜனவரி 11 முதல் 14 வரை நான்கு நாள்களில் 13,871 பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் 7 லட்சத்து 17 ஆயிரத்து 392 பேர் பயணித்துள்ளனர்.
இவர்களில் 1 லட்சத்து 88 ஆயிரத்து 705 பேர் முன்பதிவு செய்து பயணித்துள்ளனர்.
இந்த முன்பதிவின் மூலம் மட்டும் ரூ. 9 கோடியே 1 லட்சத்து 95 ஆயிரம் டிக்கெட் கட்டண வசூல் அரசு போக்குவரத்துக்கழகங்களுக்கு கிடைத்துள்ளது என போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.