எம்ஜிஆரின் நூற்றாண்டு விழாவையொட்டி அவரது உருவம் பொறித்த சிறப்பு நாணயத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வியாழக்கிழமை வெளியிட உள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசின் சார்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:
எம்ஜிஆரின் 102-ஆவது பிறந்த நாள் விழா அரசு விழாவாகக் கொண்டாடப்படுகிறது.
அதையொட்டி, கிண்டியில் உள்ள டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள எம்ஜிஆர் சிலைக்குக் கீழ் அமைக்கப்பட்டுள்ள படத்துக்கு வியாழக்கிழமை காலை 10 மணிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்துகிறார். அவரைத் தொடர்ந்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், கட்சியின் மூத்த நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்துகின்றனர்.
பின்னர், எம்ஜிஆரின் நூற்றாண்டு நினைவாக எம்ஜிஆர் உருவம் பொறித்த சிறப்பு நாணயத்தை முதல்வர் வெளியிட உள்ளார்.