மீட்கப்பட்ட சிலைகளை வைக்க பாதுகாப்பான இடங்களைக்  கண்டறிந்து வருகிறோம்: உயர்நீதிமன்றத்தில் அரசு தகவல்

இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான இடங்களில் சிலை கடத்தல் தடுப்புப்பிரிவால் மீட்கப்பட்ட சிலைகளைப் பாதுகாப்பாக வைக்க உரிய இடங்களைக் கண்டறிந்து வருவதாக உயர்நீதிமன்றத்தில் தமிழக


இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான இடங்களில் சிலை கடத்தல் தடுப்புப்பிரிவால் மீட்கப்பட்ட சிலைகளைப் பாதுகாப்பாக வைக்க உரிய இடங்களைக் கண்டறிந்து வருவதாக உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
தமிழகத்தில் உள்ள பழமையான சிலைகள் மாயமான விவகாரம் தொடர்பான வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.மகாதேவன் மற்றும் பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வில் நடந்து வருகிறது. இந்த அமர்வு முன் சிலை கடத்தல் தொடர்பான வழக்குகள் காணொலிக் காட்சி மூலம் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. 
சிலை கடத்தல் தடுப்புப்பிரிவினரால் மீட்கப்பட்ட சிலைகளைப் பாதுகாப்பாக வைப்பதற்கு இடவசதி செய்து தரக்கோரி தாக்கல் செய்யப்பட்டிருந்து மனு விசாரணைக்கு வந்தது.அப்போது அரசு தரப்பில் ஆஜரான அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞர் பி.ஹெச்.அரவிந்த் பாண்டியன்,  அருங்காட்சியகங்களில் சிலைகளைப் பாதுகாப்பாக வைக்க கட்டப்பட்டுள்ள இடங்களில் இடப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. 
எனவே இந்துசமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான இடங்களில் மீட்கப்பட்ட சிலைகளைப் பாதுகாப்பாக வைக்க உரிய இடங்கள் கண்டறியப்பட்டு வருகிறது. இதுகுறித்து இரண்டு வார காலத்துக்குள் அறிக்கை சமர்ப்பிப்பதாக தெரிவித்தார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் விசாரணையை இரண்டு வார காலத்துக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர். 
திருவண்ணாமலை: திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கோயிலை இடித்து விட்டு தேநீர் கடை கட்டப்பட்ட வழக்கு இதே அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த விவகாரம் தொடர்பாக, சம்பந்தப்பட்ட நிலத்தை அளவிட்டு அதுதொடர்பான அறிக்கைத் தாக்கல் செய்ய வழக்குரைஞர் ஆணையரை நியமித்து உத்தரவிட்டனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com