தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்தது அரசியல் பேசுவதற்காக அல்ல என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
விஜயகாந்த்தின் சாலிகிராமம் இல்லத்துக்கு நேரில் சென்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார். இந்த நிலையில், விஜயகாந்த்துடனான சந்திப்புக்குப் பின்னர் ஸ்டாலின் அளித்த பேட்டி:
கருணாநிதியின் மறைவின்போது, அமெரிக்காவில் சிகிச்சை பெற்றுவந்த விஜயகாந்த் அங்கிருந்தபடியே விடியோ மூலமாக அழுதபடி வெளியிட்டிருந்த இரங்கல் செய்தி, இன்றைக்கும் நம்முடைய மனதில் நிழலாடிக்கொண்டிருக்கிறது.
அதன் பிறகு, சிகிச்சை முடிந்து இந்தியா திரும்பியதும், விமான நிலையத்திலிருந்து நேரடியாக கருணாநிதியின் நினைவிடத்துக்கு வந்து அஞ்சலி செலுத்திய காட்சி, அவர் கருணாநிதியிடத்தில் எந்த அளவுக்கு அன்பு வைத்திருந்தார் என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.
வெளிநாட்டில் சிகிச்சை முடிந்து நல்ல முறையில் விஜயகாந்த் உடல் நலம் தேறி வந்திருக்கிறார். அவர் மேலும் உடல் நலம் தேறி சமூகத்துக்குப் பணியாற்றிட வாழ்த்துகிறேன் என்றார்.
இதைத் தொடர்ந்து, இந்தச் சந்திப்பில் கூட்டணி குறித்து பேசப்பட்டதா- என்ற செய்தியாளரின் கேள்விக்குப் பதிலளித்த அவர், அரசியல் பேசுவதற்காக இங்கு வரவில்லை. அவருடைய உடல் நலம் குறித்து விசாரிப்பதற்காகவே, மனிதாபமான உணர்வோடு அவரைச் சந்தித்தேன் என்றார். மேலும், திமுக தலைமையிலான கூட்டணிக்கு தேமுதிக வந்தால் வரவேற்பீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், உங்களுடைய நல்ல எண்ணத்துக்கு எனது பாராட்டுகள், நன்றி என்றார்.