குழந்தைக்கு எய்ட்ஸ் தொற்று ரத்தம்: மருத்துவக் கல்வி இயக்குநருக்கு நோட்டீஸ்

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண் குழந்தைக்கு எய்ட்ஸ் தொற்றுள்ள ரத்தம் ஏற்றப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில் விளக்கம் கோரி, மருத்துவக் கல்வி இயக்குநர்


கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண் குழந்தைக்கு எய்ட்ஸ் தொற்றுள்ள ரத்தம் ஏற்றப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில் விளக்கம் கோரி, மருத்துவக் கல்வி இயக்குநர், தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டுச் சங்கத்தின் திட்ட இயக்குநர் ஆகியோருக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
மணப் பாறையைச் சேர்ந்த தம்பதிக்கு அங்குள்ள அரசு மருத்துவமனையில் 2017-இல் ஆண், பெண் என இரட்டைக் குழந்தைகள்  பிறந்தன. இத்தம்பதி தற்போது திருப்பூரில் வசித்து வருகின்றனர். காய்ச்சல் காரணமாக தம்பதியின் பெண் குழந்தை  திருப்பூர் அரசு மருத்துவமனையில் கடந்த 2018-ஆம் ஆண்டு அனுமதிக்கப்பட்டது. பரிசோதனையில் குழந்தைக்கு இதய நோய் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அக்குழந்தை உயர்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டது. அங்கு குழந்தைக்கு ரத்தம் ஏற்றப்பட்டது. இதையடுத்த சில நாள்களில் குழந்தை வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில், குழந்தையின் உடலில் கட்டிகள் உருவானதை அடுத்து, மீண்டும் கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் பிப்ரவரி 8-ஆம் தேதி குழந்தை அனுமதிக்கப்பட்டது. அப்போது, அக்குழந்தைக்கு எய்ட்ஸ் நோய் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்  எய்ட்ஸ் நோய் தொற்றுள்ள ரத்தம் ஏற்றப்பட்டதாக அக்குழந்தையின் தந்தை புகார் தெரிவித்திருந்தார்.
தாமாக முன்வந்து வழக்கு: இதுதொடர்பான செய்திகள் பத்திரிகையில் வெளியானதன் அடிப்படையில், மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் நீதிபதி துரை.ஜெயசந்திரன் வியாழக்கிழமை தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்தார். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக மருத்துவக் கல்வி இயக்குநர், தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டுச் சங்கத் திட்ட இயக்குநர் ஆகியோர் 4 வாரங்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டார்.
சிகிச்சை அளிப்பதில் குறைபாடு: அரசு மருத்துவமனை மீது பெற்றோர் புகார்
 எச்ஐவி பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உரிய சிகிச்சை அளிக்க அரசு மருத்துவமனை நிர்வாகம் மறுத்து வருவதாக அதன் பெற்றோர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் குற்றம்சாட்டியுள்ளனர். இதனை மருத்துவமனை நிர்வாகம் மறுத்துள்ளது.
திருச்சி மாவட்டம், மணப்பாறையைச் சேர்ந்த தம்பதி கடந்த 9 ஆண்டுகளாக திருப்பூரில் தங்கி வேலை பார்த்து வருகின்றனர். இந்த தம்பதிக்கு 2017 பிப்ரவரி 6 ஆம் தேதி திருச்சி அரசு மருத்துவமனையில் ஒரு ஆண், ஒரு பெண் என இரட்டைக் குழந்தைகள் பிறந்தன.  இந்நிலையில், பெண் குழந்தைக்கு ஜூலை மாதம் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு ரத்தம் செலுத்தப்பட்டது. சில தினங்களுக்குப் பிறகு சிறுமிக்கு உடலில் சில பிரச்னைகள் ஏற்பட்டதாகக் கூறி மீண்டும் கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். 
அப்போது,  சிறுமிக்கு எச்ஐவி பாதிப்பு இருப்பதை மருத்துவர்கள் உறுதி செய்தனர். கோவை அரசு மருத்துவமனையில் இருதய பிரச்னை தொடர்பான சிகிச்சையின்போது தவறுதலாக ரத்தம் செலுத்தியுள்ளனர். இதனால் அவருக்கு எச்ஐவி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சிகிச்சை அளித்த சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர் தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. 
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் பெற்றோர் அளித்த மனுவின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட துறைகளில் விசாரணை நடத்தி ஒரு வாரத்துக்குள் அறிக்கை அளிக்க வேண்டும் என்று கோவை அரசு மருத்துவமனை நிர்வாகத்துக்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com