ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, பயங்கரவாதிகளின் காட்டுமிராண்டித்தனத்துக்கு முடிவுகட்டும் நேரம் வந்துவிட்டது என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் வியாழக்கிழமை மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்) வீரர்கள் சென்று கொண்டிருந்த பேருந்து மீது ஒரு பயங்கரவாதி வெடிபொருள்கள் நிரப்பிய காரை மோதி வெடிக்கச் செய்தார். இதில் 40 வீரர்கள் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலுக்கு, பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டது.
இந்தியாவில் பாதுகாப்புப் படை வீரர்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய மிகமோசமான இந்த தாக்குதல் சம்பவம் தேசம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்திய பாதுகாப்புப் படையினர் மீது பயங்கரவாதத் தாக்குதல் நடத்தியதன் மூலம் பாகிஸ்தான் மிகப்பெரிய தவறைச் செய்துவிட்டது. இதற்கு இந்தியத் தரப்பில் இருந்து உரிய பதிலடி தரப்படும் என்றும், இத்தாக்குதலை நிகழ்த்திய பயங்கரவாதிகள் அதற்கான விலையைக் கொடுக்க வேண்டியது இருக்கும் என்றும் அந்நாட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கு நடிகர் ரஜினிகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்) வீரர்கள் வாகனத்தின் மீது பயங்கரவாதிகள் நடத்திய வன்முறை தாக்குதல் மன்னிக்க முடியாதது. வன்மையாக கண்டிக்கத்தக்கது. காட்டுமிராண்டித்தனமான செயலுக்கு முடிவுகட்டும் நேரம் வந்துவிட்டது. உயிரிழந்த வீரர்களின் குடும்பத்திற்கு ஆழந்த இரங்கல் தெரிவித்துள்ள ரஜினிகாந்த், மாவீரர்களின் ஆன்மா சாந்தி அடைய ஆண்டவனை வேண்டுகிறேன் என தெரிவித்துள்ளார்.