பி.எஸ்.என்.எல். நிறுவனம் சார்பில் விரைவில் கோவை மற்றும் சேலத்தில் 4 ஜி சேவை தொடங்கப்படும் என்று பி.எஸ்.என்.எல். தமிழக வட்ட தலைமை பொதுமேலாளர் வி.ராஜூ தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி:-
பி.எஸ்.என்.எல். நிறுவனம் விரைவில் தமிழகத்தின் கோவை, சேலம் நகரங்களில் முதல் கட்டமாகவும் திருச்சி, மதுரை, வேலூர், நாகர்கோவில் ஆகிய நகரங்களில் அடுத்த கட்டமாகவும் 4ஜி சேவையைத் தொடங்க உள்ளது.
கோவை, சேலம் நகரங்களில் உள்ள பி.எஸ்.என்.எல். மொபைல் வாடிக்கையாளர்களுக்கு அவர்களது 3ஜி சிம்மிற்கு பதிலாக இலவசமாக 4ஜி சிம் வழங்கப்படுகிறது. கணிசமான எண்ணிக்கையில் 4ஜி சிம் வழங்கப்பட்டவுடன் 4ஜி சேவை இந்த இரு நகரங்களிலும் தொடங்கப்படும். 4ஜி வாடிக்கையாளர்களுக்கு டேட்டா பதிவிறக்கம் 21 எம்பிபிஎஸ் (21 ஙக்ஷல்ள்) வேகம் வரை கிடைக்கும்.
புதிய வாடிக்கையாளர்கள்: தமிழகத்தில் ஒவ்வொரு மாதமும் இரண்டு லட்சத்துக்கும் அதிகமான புதிய மொபைல் வாடிக்கையாளர்கள் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் இணைகின்றனர். மற்ற நிறுவனங்களிலிருந்து எம்என்பி முறையில் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் சேரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் கடந்த மாதங்களில் இருந்து அதிகரித்து வருகிறது.
முற்றிலும் தவறான செய்தி: பி.எஸ்.என்.எல். நிறுவனம் மூடப்படுவதாக வந்த செய்தி முற்றிலும் தவறானது. பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை மூடுவது குறித்து எந்தத் திட்டமும் மத்திய அரசுக்கு இல்லை. மாறாக, இந்திய மக்களுக்கு நாடு முழுவதும் சிறந்த சேவையை அளிக்கும் வலுவான ஒரு நிறுவனமாக பி.எஸ்.என்.எல். நிறுவனம் இருக்க வேண்டும் என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. பலத்த போட்டியின் காரணமாக ஏற்பட்ட கட்டண குறைப்பினால் உண்டான நிதிப் பற்றாக்குறையைச் சமாளிப்பதற்காக மத்திய அரசின் தொலைத்தொடர்புத்துறை பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு நிதி உதவி திட்டத்தை தயாரித்து வருகிறது.