காஷ்மீர் தாக்குதலில் உயிரிழந்த இரண்டு தமிழர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.20 லட்சம் நிவாரண நிதி வழங்க முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து, அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-
காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகள் நிகழ்த்திய பயங்கரவாத தாக்குதலில் மத்திய ரிசர்வ் காவல் படையினர் பலர் உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவத்துக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
2 தமிழர்கள் உயிரிழப்பு: காஷ்மீரில் நடந்த தாக்குதலில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள சவலாப்பேரி கிராமத்தைச் சேர்ந்த ஜி.சுப்பிரமணியன், அரியலூர் மாவட்டம் கார்குடியைச் சேர்ந்த சி.சிவசந்திரன் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். இந்தத் துயரச் சம்பவத்தில் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்த மத்திய பாதுகாப்புப் படை வீரர்கள் இரண்டு பேரின் குடும்பத்துக்கும் தலா ரூ.20 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளேன் என்று தனது அறிவிப்பில் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.