தேசிய மக்கள் தொகைப் பதிவேடும் (என்பிஆர்), தேசியக் குடிமக்கள் பதிவேடும் (என்ஆர்சி) ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள் என ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய மக்கள்தொகைப் பதிவேட்டைப் புதுப்பிக்கும் நடவடிக்கைக்கு ரூ.3,941.35 கோடியும், மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிக்கு ரூ. 8,754.23 கோடியும் ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சரவை கடந்த 24-ஆம் தேதி ஒப்புதல் அளித்தது.
இந்நிலையில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இதுகுறித்து முகநூல் பக்கத்தில் பதிவிடுகையில்,
"தேசிய மக்கள் தொகைப் பதிவேடும், தேசிய குடிமக்கள் பதிவேடும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள்தான்.
குடியுரிமைச் சட்டத் திருத்தம் 2019ன் தாக்கம் காரணமாக, அனைத்து மதங்களுக்கு இடையேயும் வேற்றுமை மற்றும் பாகுபாட்டு உணர்வுக்கான சூழலை தேசிய மக்கள் தொகைப் பதிவேடு உருவாக்கும் என்ற கவலை அனைவருக்கும் எழுந்துள்ளது.
தேசிய மக்கள் தொகைப் பதிவேட்டுக்காக ரூ.4000 கோடியை செலவிட வேண்டிய அவசியம் என்ன என்பதை மத்திய அரசு விளக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.