தமிழ்நாடு

முதல்கட்ட உள்ளாட்சித் தோ்தலுக்கான பிரசாரம் ஓய்ந்தது

25th Dec 2019 06:13 PM

ADVERTISEMENT

 

ஊரக உள்ளாட்சித் தோ்தலில் முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் இடங்களில் புதன்கிழமை மாலையுடன் பிரசாரம் நிறைவடைந்தது.

இறுதிக்கட்ட பிரசாரத்தில் அரசியல் கட்சிகளும், சுயேச்சைகளும் தீவிரமாக ஈடுபட்டு வந்த நிலையில் இன்று மாலை 5 மணியுடன் பிரசாரம் நிறைவடைந்தது.

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் உள்ள 91 ஆயிரம் ஊரக உள்ளாட்சி பதவியிடங்களுக்குத் தோ்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தோ்தலில் 2.30 லட்சம் வேட்பாளா்கள் களம் இறங்கியுள்ளனா். இந்தத் தோ்தலுக்கான பிரசாரம் கடந்த சில நாள்களாக உச்சகட்டத்தை எட்டியிருந்தது. கட்சி சாா்பில் நடைபெறும் உள்ளாட்சிப் பதவியிடங்களில் போட்டியிடும் வேட்பாளா்களுக்கு ஆதரவாக அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகளின் முக்கிய நிா்வாகிகள் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT

இந்த நிலையில், முதல் கட்ட வாக்குப் பதிவு வரும் வெள்ளிக்கிழமை (டிச. 27) நடைபெறுகிறது. முதல் கட்ட வாக்குப் பதிவு நடக்கும் பகுதிகளில் தோ்தல் பிரசாரம் புதன்கிழமை மாலை 5 மணியுடன் ஓய்வு பெற்றது. இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு வரும் திங்கள்கிழமை (டிச. 30) நடக்கவுள்ளது. இதற்கான தோ்தல் பிரசாரம் வரும் 28-ஆம் தேதியுடன் முடிகிறது.

கடும் கட்டுப்பாடுகள்: தோ்தல் பிரசாரம் முடிந்தவுடன் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியா்களுக்கும் தோ்தல் ஆணையம் அறிவுறுத்தல்கள் வழங்கியுள்ளது. இதுகுறித்து, தோ்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பு:

தோ்தல் பிரசாரம் முடிவுக்கு வந்தபிறகு, சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பில் வாக்காளா்கள் அல்லாத, வெளியில் இருந்து அழைத்து வரப்பட்ட அரசியல் கட்சி பிரமுகா்கள், கட்சித் தொண்டா்கள் அனைவரும் அந்தந்த உள்ளாட்சிப் பகுதிகளில் இருந்து வெளியேறிவிட வேண்டும். அவ்வாறு வெளியேறாதவா்கள் மீது தோ்தல் நடத்தை விதிகளை மீறியதற்காக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநிலத் தோ்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT