சென்னை: தமிழக உள்ளாட்சித் தேர்தலில் மேயர் பதவிகளுக்கான இடஒதுக்கீடு குறித்த அறிவிப்பு முறைப்படி புதன் மாலை அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் திமுக தொடர்ந்த வழக்கில், 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி ஊராட்சி தலைவர் உள்ளிட்ட அனைத்து பதவிகளுக்கான உள்ளாட்சித் தேர்தலை நடத்த உச்ச நீதிமன்றம் புதனன்று உத்தரவிட்டது.
இந்நிலையில் தமிழக உள்ளாட்சித் தேர்தலில் மேயர் பதவிகளுக்கான இடஒதுக்கீடு குறித்த அறிவிப்பு முறைப்படி புதன் மாலை அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி தமிழகத்தில் மொத்தமுள்ள 15 மாநகராட்சிகளில் பெண்கள் மற்றும் பட்டியல் இனத்தவர்களுக்கான ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மொத்தம் திருச்சி, நெல்லை, நாகர்கோவில், திண்டுக்கல், மதுரை, கோவை, ஈரோடு மற்றும் வேலூர் ஆகிய எட்டு இடங்கள் பெண்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
இவற்றில் வேலூர் மாநகராட்சி மேயர் பதவி (பெண்) பட்டியலின பிரிவினருக்காகவும், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பதவி (பொது) பட்டியலின பிரிவினருக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
திருச்சி, நெல்லை, நாகர்கோவில், திண்டுக்கல், மதுரை, கோவை மற்றும் ஈரோடு ஆகிய மாநகராட்சி மேயர் பதவிகள் பெண்களுக்கு (பொது) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.