இளநிலை ஆசிரியர் கல்வியியல் கல்வி (பி.எட்.) இடங்களுக்கு நடத்தப்பட்ட இரண்டாம் கட்ட கலந்தாய்வு முடிவில், 54 இடங்களில் மட்டுமே மாணவர் சேர்க்கை நடைபெற்றுள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள 7 அரசு கல்வியியல் கல்லூரிகள் மற்றும் 14 அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளில் இடம்பெற்றிருக்கும் 2,040 பி.எட். இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை சென்னை காமராஜர் சாலையில் அமைந்துள்ள விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் நடத்தியது.
கலந்தாய்வுக்கு 3,800 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்தனர். முதல் கட்ட கலந்தாய்வு முடிவில் 1,820 இடங்கள் நிரம்பின. 220 இடங்கள் சேர்க்கையின்றி காலியாக இருந்தன. இந்தக் காலியிடங்களுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு திங்கள்கிழமை நடத்தப்பட்டது. இதில், 54 மாணவர்கள் இடங்களைத் தேர்வு செய்து, கல்லூரி சேர்க்கைக் கடிதங்களைப் பெற்றுச் சென்றனர்.
இதுகுறித்து பி.எட். சேர்க்கை செயலர் தில்லைநாயகி கூறியது:
முதல் கட்ட கலந்தாய்வின் முடிவில் காலியாக உள்ள 220 பி.எட். இடங்களுக்கு திங்கள்கிழமை இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடத்தப்பட்டது. இதில், பங்கேற்பதற்காக, விண்ணப்பித்து இடம் கிடைக்காத 387 பேர் அழைக்கப்பட்டனர். இதில் 87 பேர் மட்டுமே கலந்தாய்வில் பங்கேற்றனர். இவர்களில் 54 பேர் மட்டுமே இடங்களைத் தேர்வு செய்து சேர்க்கை பெற்றுள்ளனர் என்றார்.